ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பெரிய சல்யூட்!! 7 வயது சிறுமி இன்று உயிரோட இருக்க காரணம் - சினிமாவை மிஞ்சும் சம்பவம்!
'சென்னையில் ஒருநாள்' பட பாணியில் பெங்களூரில் 7 வயது சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. சிறுமியின் உடலில் பொருத்துவதற்காக வேறொருவரது இதயம் ஆம்புலன்ஸில் வெறும் 13 நிமிடங்களில் 14கிமீ தொலைவிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இணையத்தை தாண்டி, பொது வெளியிலும் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
மாற்று அறுவை சிகிச்சைகள் பரவலாக உலகம் முழுவதும் மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஒருவரின் உடல் உறுப்பை வேறொருவரின் உடலில் பொருத்துவதுதான் மாற்று அறுவை சிகிச்சையின் சிறப்பம்சம். ஒரு சில உறுப்புகளை உயிருடன் இருப்பவரின் உடலில் இருந்து எடுத்து பொருத்த முடியும்.

ஆனால் சில உடல் பாகங்களை இறந்தவரின் உடலில் இருந்துதான் எடுக்க முடியும். குறிப்பாக, இதயத்தை ஒருவர் இறந்த பின்பே மருத்துவர்கள் வெளியில் எடுப்பர். இதயத்தின் நிலை நன்றாக இருக்கும்பட்சத்தில் அதனை வேறொருவரது உடலில் பொருத்தி, அந்த நபரை உயிர்பிழைக்க வைப்பர். இறக்க போகும் இருவரில், குறைந்தது ஒருவரது உயிரையாவது கப்பாற்றலாமே என்பதுதான் மருத்துவர்களின் எண்ணம்.
இதன்படி, உலகத்தில் பலருக்கு இதயம் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இந்த வரிசையில், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி பெங்களூரில் 7 வயது சிறுமிக்கு இதயம் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சிறுமி டிலேட்டட் கார்டியோமயோபதி என்ற இதயம் சார்ந்த நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மெல்ல மெல்ல இதயத்தின் செயல்பாட்டை நிறுத்தி, மரணமடைய வைக்கக்கூடியது இந்த டிலேட்டட் கார்டியோமயோபதி நோய் ஆகும். இதே நோயினால் இந்த சிறுமியின் அக்கா கடந்த 2019இல் இறந்தார். அதன்பின் இந்த நோய் இந்த சிறுமியின் உடலிலும் கண்டறியப்பட்டதை அடுத்து, இவரது உயிரை காப்பாற்ற அவரது பெற்றோர்கள் மிகவும் முயற்சித்தனர்.
இதற்காக பல்வேறு கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிறுமியின் உடல்நலத்தில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து இதயம் மாற்று சிகிச்சை குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்து, அவர்களது ஒப்புதலை மருத்துவர்கள் பெற்றனர். இதற்கான ஒப்புதலில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறுமியின் பெற்றோர்கள் கையெழுத்திட்டனர்.

ஆனால், சிறுமியின் உடலுக்கு ஏற்ற இதயம் பெற கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஆகியுள்ளது. இதயம் மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், ஒருவரது உடலில் இருந்து எடுக்கப்படும் உயிருள்ள இதயத்தை வேறொருவரின் உடலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருத்தியாக வேண்டும். இதற்காக, தனி சிறப்பு விமானங்கள் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டதை கூட கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
ஆனால், 7 வயது சிறுமிக்கான இந்த விஷயத்தில், அவருக்கான இதயம் பெங்களூருக்குள் ஒரு மருத்துவமனையில் இருந்து வேறொரு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல வேண்டும், அவ்வளவுதான். இரு மருத்துவமனைகளுக்கும் இடையேயான தூரம் வெறும் 14கிமீ மட்டுமே. ஆனால், பெங்களூர் டிராஃபிக்கை பற்றி தான் நமக்கு தெரியுமே. இதனாலேயே, சிறுமிக்கான அறுவை சிகிச்சை குறித்து முன்கூட்டியே பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இதயத்தை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸுக்காக பிரத்யேக பாதையை போலீஸார் சாலையில் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதன் மூலமாக, ஆம்புலன்ஸ் வெறும் 13 நிமிடங்கள் 7 வினாடிகளில் 14கிமீ தொலைவை கடந்து பிரம்மிக்க வைத்துள்ளது. இத்தனைக்கும், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த இதயம் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Noted: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications