மேட் இன் இந்தியா எஃப்16எஸ் போர் விமானம் தயாரிக்க டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த அமெரிக்க நிறுவனம்
‘மேட் இன் இந்தியா’ போர் விமானம் தயாரிக்க டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த அமெரிக்க நிறுவனம்..!!
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் எஃப்16எஸ் ரக போர் விமானம் தற்போது 'மேட் இன் இந்தியா' முத்திரையுடன் தயாரிக்கப்பட இருக்கிறது.

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்கும் தனது கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அதிக ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இதன்படி பாரீஸ் நகரில் நடந்த விமானக் கண்காட்சியில் எஃப்16எஸ் போர் விமானங்கள் தயாரித்து அளிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் தயாரிக்கும் அமெரிக்காவின் பிரபலமான லாக்ஹீட் மார்டின் நிறுவனத்துக்கு இந்தியா ஒப்பந்தம் வழங்கியது.

இந்திய விமானப்படைக்காக 70 எஃப்16எஸ் ரக போர் விமானங்களை தயாரித்து வழங்க லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திற்கு இந்தியா ஒப்பந்தம் அளித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘லாக்ஹீட் மார்டின்' நிறுவனம், ஏரோஸ்பேஸ், மிலிட்டரி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் தளவாடங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஒரு உலகத்தரமான நிறுவனம் ஆகும்.

உலகின் மிகப்பெரிய டிஃபன்ஸ் காண்ட்ராக்ட் நிறுவனமாகவும் லாக்ஹீட் மார்டின் விளங்கி வருகிறது.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பதே கோட்பாடு ஆகும்.

எனவே உள்ளூர் நிறுவனமான டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸுடு சிஸ்டம்ஸ் லிட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே எஃப்16எஸ் போர் விமானங்களை தயாரிக்க உள்ளது லாக்ஹீட் மார்டின் நிறுவனம்.

டாடா குழுமத்திற்கும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திற்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் வாயிலாக டெக்ஸாஸில் உள்ள லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எஃப்16எஸ் போர் விமான தயாரிப்பு பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏற்கெனவே இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் வானூர்தி உதிரிபாகங்களை ( குறிப்பாக சி-130 சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் எஸ்-92 ஹெலிகாப்டர் )ஹைதராபாத் தொழிற்சாலையில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகின் பிரபல போர் விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் செயல்படவுள்ளதால், இத்துறையில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, இந்தியாவில் இருந்து எஃப்16எஸ் போர் விமானங்கள் ஏற்றுமதி செய்யப்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








