கச்சோரிக்காக பாதியில் நிறுத்தப்பட்ட இரயில் - ஓட்டுனர்கள் சஸ்பெண்ட்!! ராஜஸ்தானில் அரங்கேறியுள்ள சம்பவம்!
வீடியோ வைரலானதை தொடர்ந்து, கச்சோரியை வாங்க இரயிலை பாதி வழியில் நிறுத்திய இரயில் ஓட்டுனர்கள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த சம்பவம் நடைபெற்றது ராஜஸ்தானில். கச்சோரி என்பது இந்த மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் திண்பண்டம் ஆகும். என்னதான் கச்சோரியின் மீது பிரியம் இருந்தாலும், இரயிலை பாதியில் நிறுத்தி ஒரு பாக்கேட் கச்சோரி வாங்கி செல்வது ஓவர்தான். இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரயில் ஓட்டுனர்கள் உள்பட ஐவர் தண்டனைக்கு உள்ளாகி உள்ளனர். மேலுள்ள வீடியோ, ராஜஸ்தான் அல்வார் கிராசிங்கில் கேட் மூடப்பட்டிருப்பதால் வாகனங்கள் அனைத்தும் அதன் பின்னால் நின்றி கொண்டிருக்க, ஒரே ஒரு நபர் மட்டும் தண்டாவாளத்தில் நின்று கொண்டிருப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.

மொத்தம் மூன்று தண்டவாளங்கள் இந்த வீடியோவில் காட்சி தருகின்றன. இதில் 2வது தண்டவாளத்தில் இவர் நின்று கொண்டிருக்க, 3வது தண்டவாளத்தில் பிறகு மெதுவாக ஒரு இரயில் தலையை காட்டுகிறது. எதற்காக இவ்வாறு எல்லாம் நடக்கிறது என நாம் நினைத்து கொண்டிருக்கையில், தண்டவாளத்தில் இருந்த நபர தனது கையில் வைத்திருந்த கவரை இரயில் ஓட்டுனருக்கு தந்துவிட்டு இரயிலை விட்டு ஓரம் வந்துவிடுகிறார்.

பின்னர் இரயில் அங்கிருந்து வேகமெடுக்கிறது. நமக்கு தெரியவந்துள்ள தகவலின்படி, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த நபர் அதே பகுதியில் கச்சோரி கடை வைத்து நடத்தி கொண்டிருப்பவராம். இரயில் ஓட்டுனர் கேட்டு கொண்டதன்பேரில் இரயில் என்ஜின் பெட்டிக்கே வந்து கொடுத்துவிட்டு செல்கிறார். இதனை அங்கிருந்த நபர் லாவகமாக படம் பிடித்து இணையத்தில் உலாவ விட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து படம் பிடித்தவர் கூறுகையில், "அல்வாரில் துத்பூர் வாசலில் காலை 8 மணியளவில் தினமும் இதுபோன்ற காட்சியை காண முடிகிறது. ஹார்ன் சத்தம் ஒலித்தவுடன், கேட் சிறிதுநேரம் மூடிப்படும். இரயில் ஓட்டுனர் கச்சோரி உடன் மீண்டும் இரயிலை முன்னகர்த்தி செல்லும்வரை இரு பக்கங்களிலும் மக்கள் காத்திருப்பார்கள்" என்றார்.

இந்த வீடியோவினை கண்ட ஜெய்பூர் இரயில்வே மேலதிகாரி இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இதன்படி முதற்கட்டமாக ஒரு பயிற்றுவிப்பாளர், இரு இரயில் ஓட்டுனர்கள் மற்றும் இரு கேட்மேன்கள் என மொத்தம் ஐந்து பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நிறைவு பெற்றவுடன் இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படுமாம்.

காலை 8 மணி என்பது மிகவும் பரபரப்பாக மக்கள் இயங்கி கொண்டிருக்கும் நேரம் ஆகும். பணியாளர்கள் அலுவலகங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சென்று கொண்டிருப்பர். மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கோ அல்லது கல்லூரிக்கோ சென்று கொண்டிருப்பர். அதுமட்டுமின்றி இரவு பணி பார்ப்பவர்களும் இந்த நேரத்தில்தான் பணி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருப்பர்.

இத்தகைய நேரத்தில் எப்போவாவது ஒருமுறை இரயிலை நிறுத்தினாலே தவறு. அதிலிலும், தினமும் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்வது சட்டப்படி குற்றமாகும். ஏனெனில் இத்தகைய செயல்கள் நேரடியாக மக்களையும், வாகன ஓட்டிகளையும் பாதிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து அல்வார் நிலைய கண்காணிப்பாளர் ஆர்.எல் மீனா கருத்து தெரிவிக்கையில், "லோகோ பைலட் தனது சொந்த விருப்பத்தின் பேரில் என்ஜினையோ, இரயிலையோ நிறுத்த முடியாது. கச்சோரிக்காக இப்படி நிறுத்துவது தவறு" என்றார்.

இரயில் தண்டவாளங்களை கடக்கும்போது எப்போதும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. இருப்பினும் நம் இந்தியாவில் இரயில் பாதையை கடக்கும்போது மக்கள் சில நேரங்களில் கவனக்குறைவாகவே நடந்து கொள்கின்றனர். இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை இதற்குமுன் செய்திகளில் பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட மயிரிழையில் வாகன ஓட்டி உயிர்த்தப்பிய சம்பவம் நாடு முழுவதும் வைரலானது.

இந்த சம்பவத்தில் வாகன ஓட்டி இரயில் வருவதற்கு உள்ளாக தண்டவாளத்தை கடந்துவிடலாம் என நினைத்தார். ஆனால் இடையில் பைக் சற்று சறுக்கி கீழே விழ, அதன் ரைடர் உயிர் தப்பினாலே போதும் என பைக்கை அங்கேயே விட்டு வெளியே வந்தார். அதற்குள் பைக்கை நெருங்கிவிட்ட இரயில் அதே வேகத்தில் பைக்கை சிக்கு நூறாக உடைத்தப்படி கிராசிங்கை கடந்தது.


Click it and Unblock the Notifications








