Log9 Materials-இன் புதிய லித்தியம் அயன் செல் உற்பத்தி ஆலை திறப்பு! எந்த நகரத்துல திறந்திருக்காங்க தெரியுமா?
Log9 Materials நிறுவனம் அதன் புதிய லித்தியம் அயன் (Li-ion) செல் உற்பத்தி ஆலையை நமது அண்டை மாநிலத்தில் திறந்திருக்கின்றது. இந்த ஆலை திறப்பு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மின்சார வாகன உற்பத்தியாக இருக்கட்டும், மின் வாகனங்கள் சார்ந்த கருவிகளின் உற்பத்தியாக இருக்கட்டும் அனைத்திலும் தற்போது இந்தியா படி படியாக உயர ஆரம்பித்து இருக்கின்றது. இந்த நிலை விரைவில் இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கேற்ப உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை மையமாகக் கொண்டு மின்சார வாகனங்கள் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கி இருக்கின்றன. அந்தவகையில் லாக்9 மெட்டீரியல்ஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய மிகப் பெரிய லித்தியம் அயன் செல் உற்பத்தி ஆலையை திறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆலை திறப்பு நிகழ்ச்சியில் நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசின் முன்னாள் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே சிவன், ஐஐடி டெல்லி இயக்குநர் டாக்டர் ரங்கன் பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜக்குர் எனும் பகுதியிலேயே லாக்9 நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை அமைந்துள்ளது. இது அமைந்திருக்கும் வளாகத்திலேயே நிறுவனத்தின் புதிய லித்தியம் அயன் செல் தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இதுவே நிறுவனத்தின் முதல் மற்றும் பெரிய வணிக ரீதியான செல் உற்பத்தி ஆலை ஆகும். இந்தியாவிற்கும் இதுவே முதல் வணிக ரீதியான லித்தியம் அயன் செல் உற்பத்தி ஆலை ஆகும்.
இந்த செல் உற்பத்தி ஆலையின் ஆரம்ப திறன் 50MWh ஆகும். இதனை எதிர்காலத்தில் லாக்9 மெட்டீரியல்ஸ் விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த லித்தியம் அயன் செல் உற்பத்தி ஆலையில் எல்டிஓ மற்றும் எல்எஃப்பி ரக செல்களும் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதவிர 22 சீரிஸ் மற்றும் 66 சீரிஸ் ரக பெரிய உருளை வடிவ பேட்டரிகளையும் லாக்9 அதன் புதிய ஆலையில் தயாரிக்க திட்டமிட்டு இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் கூற்றின்படி, எல்டிஓ (Lithium Titanium Oxide) செல்கள் பயன்படுத்துவதன் வாயிலாக ஒவ்வொரு வாகனங்களில் இருந்தும் வெளியாகும் கார்பன் வாயு பெருமளவில் குறைய இருக்கின்றது.
இதன் வாயிலாக ஒரு வாகனத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 147 கிலோ டன் வரையில் CO2-வை குறைக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும், லாக்9 மெட்டீரியல்ஸ் உள்நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்யப்பட்ட பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
இந்த சிஸ்டத்திற்கு 'சார்விக்' (Charvik) என அது பெயரிட்டு இருக்கின்றது. சார்விக் என்பது ஓர் அறிவார்ந்த மற்றும் உள்ளுணர்வு கொண்ட பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகும். அதாவது, எந்த சூழலிலும் ஆபத்தை ஏற்படுத்தாது என்பதற்கான பொருளே இது ஆகும். லாக்9 மெட்டீரியல்ஸ் தான் வடிவமைக்கும் செல்களை மேம்பட்ட குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட செல் கட்டுப்பாட்டு திறன் கொண்டதாக தயார் செய்திருப்பதாக கூறி இருக்கின்றது.
ஆகையால், லாக்9 மெட்டீரியல்ஸின் பேட்டரியைக் கொண்டிருக்கும் வாகனங்களில் தீ விபத்திற்கான சாத்தியக் கூறு மிகக் குறைவு என தெரிகின்றது. இதுமட்டுமின்றி, தங்கள் நிறுவனம் தயாரிக்கும் செல்கள் நீண்ட ஆயுட் காலம் கொண்டவை மற்றும் அதிக வேகத்தில்கூட அவற்றை சார்ஜ் செய்து கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இதுதவிர, இளம் தலைமுறையினர் மின்சார வாகனம் சார்ந்து இயங்க வைக்க ஏதுவாக புதிய பாட திட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். லாக்9 ரைஸ் (Log9 RISE) எனும் பெயரின்கீழ் அந்த பாடத் திட்டத்தை அவர்கள் தொடங்கி இருக்கின்றனர். இதன் வாயிலாக இளம் தலைமுறையினருக்கு பேட்டரி தொழில்நுட்பம் சார்ந்து அறிவுத் திறனை வளர்க்க இருக்கின்றது, லாக்9 நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது லாக்9 நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பேட்டரிகளை பரந்த அளவு தயாரித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிய ஆலையை அது திறந்திருக்கின்றது. இந்த ஆலை நாட்டின் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தேவையில் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









