போடுங்க அம்மா ஓட்டு... ____சின்னத்த பாத்து... தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய அரசு பஸ்கள்...!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணியல் அரசு பஸ்கள் களமிறங்கியுள்ளன. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பினை கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தல், இம்மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால், தற்போது இந்தியா முழுவதும் தேர்தல் திருவிழா கலைக்கட்டத் தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கின்றது. அவ்வாறு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 18ம் மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.

ஆகையால், இந்த தேர்தலில் பல்வேறு முக்கிய கட்சிகள் உட்பட சுயேட்சைகள் பலரும் போட்டியிட உள்ளனர். இதற்கான களப்பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு, தேர்தலை முன்னிட்டு அறிக்கைகளையும், வாக்குறுதிகளையும் அரசியல் கட்சியினர் மக்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில் உண்மையான போட்டியாக காங்கிரஸ்-பாஜக ஆகிய இரு கட்சிகளிடையே தான் நிலவி வருகிறது.

இந்தசூழலில், தேர்தலின் முக்கியத்துவம் குறித்து தேர்தல் ஆணையம் உட்பட சில தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக தேர்தல் ஆணையம் சமீபத்தில், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாட்டுபுறப்பாடலை பாடி வரும் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி குறலில் இந்த பாடல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடலில் சில முன்னணி நடிகர்களும், பாடகர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த பாடலில், தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும் தேர்தல் உரிமையைப் பெறுவதற்காக நம் முன்னோர்கள் செய்த தியாகத்தைக் குறித்தும் பாடப்பெற்றுள்ளது.

இவ்வாறு, பல்வேறு வழிகளில் மக்களுக்கு தேர்தல் குறித்தும், ஓட்டிற்கு பணம் வாங்கக்கூடாது என்பதைக் குறித்தும் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகத்தில் மாநிலத்தின் அரசுப் போக்குவரத்து கழகமான பெங்களூரு நகர போக்குவரத்து கழகம், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் 'வாக்களிப்பது நமது உரிமை', 'தயவுசெய்து வாக்களியுங்கள்' என எழுதியுள்ளது.

கர்நாடக அரசின் இந்த வித்தியாசமான முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இதுபோன்று முயற்சிகள் தமிழகத்தில் எடுக்கப்படாமல் இருப்பது வேதனையை அளிக்கும் விதமாக இருக்கிறது. மேலும், இதுபோன்ற விழிப்புணர்வுகளை மக்களுக்குக் எடுத்துரைப்பது அரசின் கட்டாயமாகவும் பார்க்கப்டுகிறது.

ஆனால், இதற்கு மாறாக, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக கட்டுக்கட்டாக பணத்தை எற்றிச் செல்லும் ஊர்தியாக தமிழக அரசுப் பேருந்துகள் சமீபகாலமாக மாறி வருகிறது. இதுகுறித்த செய்திகளை நாம் அவ்வப்போது ஊடகங்களில் கண்டுவருகிறோம். ஆகையால், அரசியல்வாதிகள் கொடுக்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு விலைக்குப்போகாமல், நமது வாக்கை உரியவர்களுக்கு போட்டு நல்ல ஆட்சியாளர்ளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல ஆட்சி நடைபெறும்.


Click it and Unblock the Notifications








