ஊழலை தடுக்க அரசு உருவாக்குன அமைப்புக்கு 7 பி.எம்.டபிள்யூ கார்கள்... நாடு முழுக்க அதிருப்தி!
இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களும், பல்வேறு துறைகளும் புதிய வாகனங்களை வாங்குவதற்காக குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை டெண்டர்களை வெளியிடுவது வழக்கம். பொதுவாக, இந்த டெண்டர்கள் டொயோட்டா, மஹிந்திரா, டாடா போன்ற சாதாரண கார்களுக்காக இருக்கும். ஆனால் தற்போது, இந்திய ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், ஏழு சொகுசு பிஎம்டபிள்யூ செடான் கார்களை வாங்குவதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.
இதில் என்ன சுவாரஸ்யமான விஷயம் என்றால், லோக்பால் அமைப்பானது நாட்டின் ஊழல்களை தடுப்பதற்காகவும், அரசியல்வாதிகள் ஊழல்களால் கிடைத்த சொகுசு வாழ்க்கையில் வாழாமல் சாதாரணமான வாழ்க்கையை வாழ வேண்டும் என வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டது ஆகும். இத்தகைய அரசு அமைப்பே விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை வாங்க இருப்பது ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் இந்திய லோக்பால் வெளியிட்ட டெண்டரின்படி, ஏழு பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்கள் வாங்கப்பட உள்ளன. குறிப்பாக, 3-சீரிஸ் காரின் 330எல்ஐ ஸ்போர்ட் வேரியண்ட், நீளமான வீல்பேஸ் உடன், வெள்ளை நிறத்தில் வாங்கப்பட உள்ளன. ஒரு காரின் விலை சாலை வரியுடன் சேர்த்து ரூ.70 லட்சம் ஆகும். இந்த மொத்த கொள்முதலின் மதிப்பு ரூ.5 கோடி என அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் கடந்த அக்டோபர் 16 அன்று வெளியிடப்பட்டது. இந்த டெண்டர் ஆனது திறந்தநிலை டெண்டர் ஆகும். ஆதலால், இதில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், புகழ்பெற்ற முகவர்களிடமிருந்து ஏலங்களை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏலங்களின் மதிப்பீடு நவம்பர் 7 அன்று தொடங்கும்.

ஏழு பிஎம்டபிள்யூ 330எல்ஐ சொகுசு கார்கள் புது டெல்லியின் வசந்த் கன்ச் இன்ஸ்டிடியூஷனல் பகுதியில் உள்ள லோக்பால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். சப்ளை ஆர்டர் வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள்ளும், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள்ளும் கார்களை டெலிவிரி செய்ய வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்பால் தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்களுக்கான அதிகாரப்பூர்வ அலுவலக வாகனங்களை மேம்படுத்தவும், தரப்படுத்தவும் இந்த புதிய பிஎம்டபிள்யூ 330எல்ஐ கார்கள் வாங்கப்படுகின்றன. கார்களை வழங்குவதுடன், டெண்டரின்படி, தேர்ந்தெடுக்கப்படும் விற்பனையாளர் அல்லது நிறுவனம் லோக்பால் ஓட்டுநர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விரிவான செய்முறை மற்றும் கோட்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.
இந்த சொகுசு கார்களை திறமையாகவும் பாதுகாப்பாகவும் ஓட்டுவதற்கான திறனை ஊழியர்கள் பெறுவதை இந்த பயிற்சி உறுதி செய்ய வேண்டும். பயிற்சி குறைந்தபட்சம் ஏழு நாட்களாக, கார்கள் டெலிவரி செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இருப்பினும், வாங்கப்படும் கார்கள் அனைத்தையும் வெவ்வேறு விதமான கார்களாக வாங்காமல், குறிப்பிட்ட பிஎம்டபிள்யூ 330எல்ஐ காராக வாங்குவதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

பிஎம்டபிள்யூ 330எல்ஐ ஆனது ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ-இன் பிரீமியம் நடுத்தர செடான் ரக கார் ஆகும். சாதாரணமான செடான் காராக இல்லாமல், இது கிரான் லிமோசின் கார் ஆகும். அதாவது அந்த அளவிற்கு இந்த காரின் நீளம் அதிகம் ஆகும். எந்த அளவிற்கு நீளம் அதிகம் என்றால், காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் (வீல்பேஸ்) மட்டுமே 2,961மிமீ ஆகும்.
இதன் மூலமாக, 3-சீரிஸ் அதன் பிரிவில் மிகவும் விசாலமான இரண்டாவது வரிசை இருக்கைகளை கொண்டுள்ளது. காரின் அதிகப்படியான நீளத்திற்கு ஏற்ப, காரின் உயரமும் குறைவாக தாழ்வாக இருப்பதால், இந்த காரில் பயணம் செய்வது மிகவும் சொகுசானதாக உள்ளது. பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லோக்பால் தலைவரின் சம்பளம், படிகள் மற்றும் சேவை நிபந்தனைகள் உள்ளிட்டவை இந்திய தலைமை நீதிபதிக்கு இணையானவை. உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான சலுகைகளைப் பெறுகிறார்கள். இத்தகைய உயர் பதவி வகிப்பவர்கள் பிஎம்டபிள்யூ காரை பெறுவதும், பயன்படுத்துவதும் ஆச்சிரியமான ஒன்றல்ல, ஆனால் ஊழலுக்கு எதிரான அரசாங்க அமைப்பில் இருப்பவர்கள் தங்களது அலுவலக பயன்பாட்டிற்கே இந்த அளவிற்கு விலையுயர்ந்த காரை பெறுவதுதான் ஆச்சிரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









