ஒன்று கூடி விமானத்தை நிறுத்திய எறும்புகள்!! ஏர் இந்தியாவின் நிலைமை இவ்வளவு மோசமா இருக்கா!
எறும்புகளினால் டெல்லியில் இருந்து இலண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்னர் காலத்தில் கொடிக்கட்டி பறந்துவந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பழமை அடைந்து வருகின்றன. அதேநேரம் அவற்றில் சில நிறுவனங்கள் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன. இதற்கு கொரோனா வைரஸ் பரவலும் ஒரு காரணம்.

என்றாலும், சில நிறுவனங்கள் அதற்கு முன்பு இருந்தே நஷ்டத்தில் இருந்து வருகின்றன. இதற்கு மிக சரியான உதாரணம் ஏர் இந்தியா. இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவது நம் அனைவரும் தெரிந்ததே.

இதனால் தான் மத்திய அரசும் அரசு உடைமையில் உள்ள ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போதைய ஏர் இந்தியா விமானங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

ஏர் இந்தியா நிறுவனம் முறையாக விமானங்களை பராமரிக்காமல் இருப்பதாகவும், மோசமான சேவைகளை வழங்குவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் இருந்து இலண்டனுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி மதியம் 2 மணியளவில் ஏஐ-111 என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது. டிக்கெட் பெற்ற சில பயணிகள் விமானத்திற்குள் ஏற துவங்கிய நிலையில், விமானத்தின் பிஸ்னஸ் க்ளாஸ் இருக்கைகள் இருந்த இடத்தில் எறும்பு கூட்டம் இருப்பதை பயணிகள் கவனித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து இதனை பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். பிறகு விமானத்தின் பிஸ்னஸ் க்ளாஸை வந்து பார்வையிட்ட அதிகாரிகள் தங்களது அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பி வைத்தனர். எறும்புகள் கூட்டம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை வெளிக்காட்டும் படங்கள் எதுவும் நமக்கு கிடைக்க பெறவில்லை.

எங்களுக்கு தெரிந்த வரையில், பயணிகள் அமர முடியாத அளவிற்கு எறும்புகள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் புறப்பட தயாராக இருந்த AI-111 விமானம் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக போயிங் 787-8 விமானம் இலண்டனுக்கு புறப்பட்டு சென்றது.

ஆனால் இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில், அது எறும்புகளின் திரள் அல்ல, அதனால் விமானம் டேக்-ஆஃப் ஆகுவது ரத்தாகவில்லை என வெளியாகி வரும் செய்திகளுக்கு மாற்றாக குறிப்பிட்டுள்ளது. விமானங்களில் இவ்வாறான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது ஒன்றும் புதியது அல்ல.

இதேபோன்ற நிகழ்வு கடந்த மே மாத இறுதியிலும் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் நடைபெற்றது. என்ன அப்போது எறும்புகளுக்கு பதிலாக வௌவால்களினால் ஏர் இந்தியா விமானத்தின் அமெரிக்க பயணத்தில் தடை ஏற்பட்டது. தற்போதைய எறும்பு நிகழ்வை போன்று, இந்த சம்பவமும் டெல்லி விமான நிலையத்தில் தான் அரங்கேறியது.

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் உட்புற கேபினில் வௌவால் பறப்பதை சில பயணிகள் கண்டுள்ளனர். இதனால் டேக்-ஆஃப் ஆன விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது. அதன்பின் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழிறக்கிவிடப்பட்டனர். பயணிகள் வெளியேற்றப்பட்ட பின்பு, புகை மூலமாக அந்த வௌவால் சாவடிக்கப்பட்டது.

தற்போது எறும்புகள் கூட்டத்தினால் ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பூடான் இளவரசர் ஜிக்மே நம்ஜியேல் வாங்சக்கும் பயணம் செய்ய இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தினால் மதியம் 2 மணியளவில் துவங்க இருந்த இந்த டெல்லி-லண்டன் பயணம் கிட்டத்தட்ட 3.20 மணிநேரம் தாமதமாக மாலை 5.20 மணிக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு குளறுப்படிகளினால் பாகிஸ்தானின் சில ஏர்லைன் விமானங்கள் ஐரோப்பாவில் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவற்றான சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டால் நமது ஏர் இந்தியாவிற்கும் தடை உருவாகலாம்.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications








