பெற்றெடுத்த அம்மாவுக்காக இதுக்கூட பண்ணலனா எப்படி... பிச்சைக்காரன் பட விஜய் ஆண்டனியை மிஞ்சிவிட்டார்!!
டொயோட்டா (Toyota) கார்கள் உலகளவில் மக்கள் பலரால் தரமானதாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு, பல்வேறு வலிமையான கார்களை கடந்த காலங்களில் இருந்து டொயோட்டா உருவாக்கி உள்ளது. அவ்வாறு, டொயோட்டா உருவாக்கிய கார் தான் லேண்ட் க்ரூஸர் பிராடோ (Land Cruiser Prado) ஆகும். இந்த டொயோட்டா காரின் தரத்தை வெளிக்காட்டும் வகையில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. இலண்டனில் வசிக்கும் ஒருவர் இந்தியாவில் உள்ள அவரது அம்மாவை சந்திப்பதற்காக அங்கிருந்து தானே வரை தனது லேண்ட் க்ரூஸர் பிராடோ காரில் வந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
நீண்ட தொலைவிற்கு, ஒரு கண்டம் தாண்டி ஒரு கண்டத்திற்கு பயணம் செய்யும் வழக்கம் கடந்த பல வருடங்களுக்கு முன்பு இருந்தே உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், கொல்கத்தாவில் இருந்து இலண்டன் வரையில் இயக்கப்பட்ட பேருந்து சேவையை பற்றி உங்களில் நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஆனால், அதன்பின் இராணுவ கட்டுப்பாடுகள் எல்லா நாடுகளிலும் கடுமையானதன் காரணமாக, அவ்வாறான தொலைத்தூர பயணங்கள் மிகவும் அரிதாகிவிட்டன. ஏனெனில், ஒரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு சாலை வழியாக செல்ல வேண்டுமெனில், பணத்தை விட பல்வேறு அதிகாரிகளிடம் அனுமதியை பெற வேண்டியுள்ளது. இருப்பினும் அவ்வப்போது சிலர் இவ்வாறான தொலைத்தூர பயணங்களை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில், இங்கிலாந்தின் இலண்டனில் வசித்து விராஜித் முன்கலே என்பவர் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள தனது அம்மாவை சந்திப்பதற்காக சுமார் 18,300கிமீ தொலைவிற்கு, 16 நாடுகளை கடந்து தனது டொயோடா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி காரில் சாலை வழியாக வந்துள்ளார். இதற்கு விராஜித் முன்கலேவுக்கு மொத்தம் 59 நாட்கள் தேவைப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி துவங்கிய இவரது பயணம் ஜூன் 17ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது. இதில் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த பயணத்தில் விராஜித் முன்கலே பயன்படுத்தி இருப்பது சுமார் 25 வருடங்கள் பழமையான டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் ஆகும். விராஜித் இந்தியாவில் உள்ள அவரது அம்மாவை அவ்வப்போது சந்திப்பது வழக்கமான ஒன்றே.
ஆனால், இந்த சந்திப்புகளுக்கு விமானத்தில் மும்பை வழியாக அவர் இந்தியா வருவதே வழக்கம். ஆனால், இந்த முறை சற்று வித்தியாசமாக சாலை வழியாக இங்கிலாந்தில் இருந்து தானேவுக்கு வந்துள்ளார். இந்த நீண்ட தூர பயணத்தில் விராஜித் கடந்த வந்த நாடுகளாவன, பிரான்ஸ், ஜெர்மனி, போலாந்து, பெல்ஜியம், லிதுவான்யா, எஸ்டோனியா, லாட்வியா, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, கைர்ஜிஸ்தான், சீனா, திபெத் மற்றும் நேபாளம் என்பன ஆகும்.

இந்த அசாத்திய பயணம் குறித்து விராஜித் முன்கலே இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "நான் ஒவ்வொரு நாளும் 400இல் 600கிமீ தொலைவிற்கு கார் ஓட்டினேன். இதனை 1,000கிமீ ஆக அதிகரிக்க முயற்சித்தேன். பாதுகாப்பு கருதி, இரவுநேர பயணங்களை தவிர்த்துக் கொண்டேன்" என்றார். இந்த பயண திட்டத்தை முதன்முதலில் விராஜித் அவரது மனைவியுடன் கூறியபோது, அதை அவர் நம்பவில்லையாம்.
கணவர் எதோ நகைச்சுவைக்காக கூறுகிறார் என எண்ணிய விராஜித்தின் மனைவி, பின்னர் கணவரின் முழு திட்டத்தை அறிந்த பின், அவருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். இந்த இலண்டன் - தானே பயண திட்டத்தை சில வருடங்களுக்கு முன்னரே விராஜித் வகுத்துவிட்டார். அந்த சமயத்தில் இருந்த கொரோனா தொற்று பரவலினால் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருந்தவர் தற்போது அதனை நிஜமாக்கி உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இலண்டனில் இருந்து தானேவுக்கு இன்னும் குறுகிய தொலைவில் விரைவாக வந்திருக்க முடியும். ஆனால், விராஜித் பாதுகாப்பு கருதி ரஷ்யா வழியாக, இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். இத்தகைய பயணங்கள் நாம் நினைப்பதை காட்டிலும் செலவு மிகுந்தது. முக்கியமாக, இந்த தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ப காரில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது முக்கியமாகும்.


Click it and Unblock the Notifications









