இத்தனை வயதில் இது நடக்கும்னு எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க - பெற்ற தாயின் மனசு குளிர்ந்திருக்கும்!!
புதியதாக வாகனங்கள் வாங்கினால் அதில் முதலாவதாக பெற்ற தாய், தந்தையை ஏற்றி செல்லவே அனைவரும் விரும்புவோம். ஆண் பிள்ளைகளாக இருந்தால், தந்தையை விட தாயின் மீதே அதிக பாசம் இருக்கும் என்பதால், முடிந்தவரையில் அம்மாவை ஆவது புதிய வாகனத்தில் ஒரு ரவுண்ட் அழைத்து சென்று வருவர். ஆனால், இங்கு ஒருவர் ஒருபடி மேலே சென்று, தனது அம்மாவுடன் சுமார் 380கிமீ தொலைவிற்கு விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கில் சென்றுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.
உலகிலேயே தொலைத்தூர பயணங்களை அவ்வப்போது மேற்கொள்பவர்கள் அதிகம் உள்ள நாடுகளுள் நம் இந்தியாவும் ஒன்றாகும். ஏனெனில், அந்த அளவிற்கு நம் நாடு பரப்பளவில் பெரியது மற்றும் சுற்றிப் பார்ப்பதற்கு நம் நாட்டில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. இவ்வாறான தொலைத்தூர பயணங்களை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் அல்லது கணவன்/ மனைவியை அழைத்து செல்வர்.

அம்மா, அப்பாவும் நெருக்கமானவர்கள் தான் இருந்தாலும், வயதான காலத்தில் அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என நிறைய பேர் பெற்றோரை குறுகிய தூர பயணங்களுக்கு மட்டுமே அழைத்து செல்வர். ஆனால், இன்றைய மாடர்ன் உலகில் தொழிற்நுட்ப கருவிகளின் உதவியுடன் முடியாத காரியம் எதுவுமே கிடையாது.
இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக் ஓனர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது அம்மாவை சுமார் 380கிமீ தொலைவிற்கு தனது புத்தம் புதிய ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

சேண்டி வீர் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், பைக்கை ஓட்டும் அந்த ஹார்லி-டேவிட்சன் பைக் ஓனர் மற்றும் அவரது அம்மா என இருவரும் ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட், ரைடிங் பேட்ஸ், ஷூஸ் மற்றும் கையுறைகள் என முறையாக பாதுகாப்பு ரைடிங் கியர் அனைத்தையும் அணிந்துள்ளதை காணலாம்.
இவர்களது ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிலும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் அமைந்திருந்தன. மேலும், பயணத்தை காட்சிப்படுத்துவதற்காக சேண்டி வீர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் கோ-புரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பைக்கிற்கு ஒரு சிறிய பூஜையை போட்ட பின், அதிகாலையிலேயே இவர்களது பயணம் துவங்கிவிட்டது. அதிகாலை 5:30 மணியளவில் மும்பையை இவர்கள் கடந்துவிட்டனர்.

மும்பையில் இருந்து கோன்கன் என்கிற மலைப்பிரதேச பகுதிக்கு செல்வதுதான் இவர்களது திட்டம் ஆகும். கிட்டத்தட்ட 5 மணிநேர பயணத்திற்கு பிறகு 10:30 மணியளவில் ப்லோட்புர் என்கிற பகுதியை அடைந்ததும் அம்மாவும், மகனும் தங்களது காலை உணவை எடுத்துக் கொண்டனர். புத்துணர்ச்சியாக மீண்டும் பயணத்தை துவங்கியவர்கள் வழியெங்கும் இருந்த அழகான மலைகளையும், அதன் வழியாக செல்லும் சுரங்க பாதைகளையும் பார்த்தப்படி சென்றுள்ளனர்.
இவர்களது மோட்டார்சைக்கிள் பயணம் சற்று மெதுவாகவே இருந்தது. அதிகாலையில் துவங்கிய இவர்களது பயணம் மாலை 4:15 மணியளவில் தான் கோன்கன் பகுதியில் நிறைவடைந்துள்ளது. இயற்கை அழகை ரசித்தப்படி செல்வதற்காகவும், பாதுகாப்பாக செல்வதற்காகவும் இவர்கள் மெதுவாக சென்றிருக்கலாம். இந்த பயணத்தில் இவர்கள் பயன்படுத்திய ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.4 லட்சமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலை கொண்ட பவர்ஃபுல்லான பைக்கை வைத்திருப்பினும், நெடுஞ்சாலையிலும் இவர்கள் மிதமான வேகத்தில் சென்றுள்ளனர். இதில் இருந்து தனது அம்மாவின் பாதுகாப்பில் இந்த இளைஞர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறான மிதவேக பயணங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டாலும், பாதுகாப்பானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









