2.44கிமீ-க்கு எந்த வளைவும் கிடையாது... அமெரிக்கா ரேஞ்சுக்கு வயரில் கட்டப்படும் பாலம்!!
கடல், ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளின் மேல் மேம்பாலங்கள் எப்போதும் பார்ப்பதற்கு ரம்மியமானவை. தமிழ்நாட்டில் மிக பிரபலமான பாலம் என கேட்டால் எல்லாருக்கும் முதலில் நியாபகம் வருவது பாம்பன் பாலம் (Pamban Bridge) ஆக தான் இருக்கும். பாம்பன் பாலம் அளவிற்கு இல்லையென்றாலும், கர்நாடக அரசு பிரம்மாண்டமாக ஒரு புதிய பாலத்தை சராவதி ஆறு (Sharavaati River)-இன் மீது எழுப்பி வருகிறது. நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ள இந்த பாலத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
புவியியல் அடிப்படையில் கர்நாடகா ஆனது ஓர் தனித்துவமான மாநிலம் ஆகும். கர்நாடகாவில் உள்ள சராவதி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலய பகுதியை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் நினைக்கிறேன். கடலில் தனித்தனி தீவுகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஆற்றின் நீர்த்தேக்க பகுதியில் சிறு சிறு தீவுகள் இந்த சரணாலய பகுதியில் உள்ளன.

சுற்றிலும் மலைகள், அவற்றை சுற்றி சராவதி ஆற்றின் நீர் இருக்க, மேடான பகுதிகள் மட்டுமே நீரில் இருந்து வெளியே நீண்டிருக்கும் ரம்மியமான காட்சியை இங்கு காணலாம். பிரபலமான ஜோக் நீர்வீழ்ச்சி (Jog Falls) இந்த பகுதியில்தான் உள்ளது. இந்த பகுதியில்தான் கர்நாடக அரசு புதிய மேம்பாலத்தை ரூ.423 கோடி செலவில் கட்டி வருகிறது. கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த பாலத்தின் ட்ரோன் (Drone) காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சராவதி ஆற்றில் நீர்பெருக்கு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில், தற்போதைய நீர் மட்டத்தில் இருந்து நன்கு உயரமாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆனது சராவதி ஆற்றின் மேல் கட்டப்படவில்லை. இந்த ஆற்றை மறித்து மனிதர்கள் கட்டியெழுப்பிய அணையினால் ஏற்பட்ட நீர் தேக்கத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. ஆதலால், சராவதி ஆறு ஆக்ரோஷமாக ஓடினாலும் பாலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இதனை யூகித்து சரியாக நீர்த்தேக்கத்தின் மத்தியில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 69-இன் இரண்டாம் பாதையான 369இ சாலை செல்ல உள்ளது. ஆதலால், இந்த பாலம் அமைக்கப்படுவது அக்கரையில் உள்ள சிக்காந்தூர் போன்ற சிறு சிறு கிராமங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் என கர்நாடக அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
2018 பிப்ரவரியில் துவங்கப்பட்ட பணிகள் நிறைவு பெற்று இன்னும் சில மாதங்களில் இந்த பாலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. மொத்தம் 2.44கிமீ நீளம் கொண்ட இந்த பாலம் 16 மீட்டர்கள் அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் மொத்தம் 17 பில்லர்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த புதிய பாலத்தினால் பயண நேரம் பாதியாக குறைய உள்ளது.
சிக்காந்தூரில் சவுதேஷ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. கரைக்கு அந்த பகுதியில் இருந்து இந்த கோயிலுக்கு வருபவர்கள் தற்சமயம் படகுகளின் மூலமாக அல்லது சராவதி ஆற்றை சுற்றிக் கொண்டு சிக்காந்தூருக்கு வரும் நிலை உள்ளது. அப்படியிருந்தும் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்தில் இருந்து 10,000 பக்தர்கள் சவுதேஷ்வரி கோயிலுக்கு வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஆற்று பாலம் வருவதினால், சிக்காந்தூர் கிராமம் மேலும் பிரபலமடையும் என்பதை உறுதியாக சொல்லலாம். ஏற்கனவே, சராவதி ஆற்றின் நீர்த்தேக்கம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இப்போது பாலம் வருவதால், இயற்கை உடன் மாடர்ன் கலைநயத்தையும் காணலாம். ஆதலால், இந்த பாலம் திறக்கப்பட்ட பின் முடிந்தால் ஒருமுறை சென்றுவர பாருங்கள்.


Click it and Unblock the Notifications








