லாரி டிரைவருக்கு அசால்டாக 1,000 ரூபாய் அபராதம் விதிப்பு... காரணத்தை கேட்டு ஆடிப்போன வாகன ஓட்டிகள்...
லாரி ஓட்டுனருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டி கொண்டிருக்கும்போது ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்திற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், நீங்கள் சரியாகதான் படித்துள்ளீர்கள். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த பிரமோத் குமார் ஸ்வைன் என்பவர், தனது லாரிக்கான டிரைவிங் பெர்மிட்டை புதுப்பிப்பதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. பிரமோத் குமார் ஸ்வைனின் லாரிக்கு எதிராக அபராத தொகை நிலுவையில் இருப்பதாக அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் லாரியை ஓட்டியது இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரமோத் குமார் ஸ்வைன், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு உரிய பதிலை அளிக்கவில்லை. இறுதியில் பெர்மிட் புதுப்பிக்கப்படுவதற்கு முன்னதாக அபராத தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பிரமோத் குமார் ஸ்வைன் தள்ளப்பட்டுள்ளார்.

பிரமோத் குமார் ஸ்வைன் கடந்த மூன்று ஆண்டுகளாக லாரி ஓட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெல்மெட் அணியாமல் லாரி ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறித்து ஆர்டிஓ அதிகாரிகள் எந்தவிதமான விளக்கத்தையும் தரவில்லை என பிரமோத் குமார் ஸ்வைன் புலம்பியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரமோத் குமார் ஸ்வைன் கூறுகையில், ''இதுபோன்ற தவறுகள் நடக்காமல் நடப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்'' என்றார். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட வினோதமாக சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

கடந்த காலங்களில் ஹெல்மெட் அணியவில்லை என காரில் பயணம் செய்த பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்த பலருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக அபராதம் விதித்த குளறுபடிகளும் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன.

சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு தவறான காரணங்களுக்காக இ-சலான் வழங்கப்பட்டு விடுகிறது. இதுதவிர கைகளால் எழுதி வழங்கப்படும் அபராத ரசீதுகளில் போக்குவரத்து காவல் துறையினர் சில சமயங்களில் காரணத்தை தவறாக குறிப்பிட்டு விடுகின்றனர். இதன் விளைவாக இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்திற்காகவும் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹெல்மெட் அணிந்து கொண்டே கார் ஓட்டும் நூதன போராட்டங்களும் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. எனவே இதுபோன்ற குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








