ஆட்டோவை பூங்காவாக மாற்றிய உரிமையாளர்... காரணம் என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...
புனே நகரை சேர்ந்த உரிமையாளர் ஒருவர், தன் ஆட்டோவை பூங்காவாக மாற்றம் செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.

மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி. தற்போது 45 வயதாகும் இவர், சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்துள்ளார். அதனை வாடகைக்கு இயக்கி வரும் இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி, இயற்கை மீது தீராக்காதல் கொண்டவர்.

ஆனால் இன்றைய சூழலில், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல், நாளுக்கு நாள் மிக கடுமையாக பாதிப்படைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலிக்கு இது பெருங்கவலையை ஏற்படுத்தியது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும் என அவர் முடிவு எடுத்தார். ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரால் பெரிதாக என்ன சாதித்து விட முடியும்? என அவர் தளர்ந்து விடவில்லை.

அப்போது அவரது மனதில் உதித்த சிந்தனைதான் பூங்கா ஆட்டோ. ஆம், இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி, தனது ஆட்டோவை ஒரு பூங்காவாக மாற்றி விட்டார். இந்த ஆட்டோவில் பயணம் செய்தால், நிசப்தமான வனாந்திரத்தில் இருப்பது போன்ற உணர்வு நிச்சயம் ஏற்படும்.

இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலியின் இயற்கை மீதான காதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கவலை ஆகியவை, அவரது ஆட்டோவில் எதிரொலிக்கின்றன. இந்த ஆட்டோவின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை, செயற்கை புற்களால் கவர் செய்துள்ளார் இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி.

இருக்கைகளும் இதற்கு விதி விலக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கைகள் முழுவதும் செயற்கை புற்களால் வேயப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்டோ முழுக்க பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலியின் பூங்கா ஆட்டோவினுடைய முக்கியமான சிறப்பம்சமே பறவைகள் மற்றும் விலங்குகள் போன்று ஒலி எழுப்பும் ஆடியோ சிஸ்டம்தான். இந்த ஸ்பெஷல் ஆடியோ சிஸ்டம் எழுப்பும் ஒலியானது, அச்சு அசலாக பறவை, விலங்குகளின் சப்தம் போன்றே உள்ளது.

இதுதவிர பூக்கள், ரம்மியமான கலர் விளக்குகள் என இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலியின் பூங்கா ஆட்டோ அமர்க்களப்படுத்துக்கிறது. இந்த ஆட்டோவில் பயணம் செய்தால், அமைதியான வனாந்திரத்திற்கு சென்று திரும்பிய உணர்வு மனதில் அப்படியே நிலைத்து நின்று விடுகிறது.

ஆட்டோவை பூங்காவாக மாற்றும் பணிகள் 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன்தான் நிறைவடைந்தன. மஹாராஷ்டிரா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, புனே மக்கள் இந்த பூங்கா ஆட்டோவை வியப்புடன் பார்த்து செல்கின்றனர். பயணிகள் உற்சாகமாக பயணித்து வருகின்றனர்.

பூங்கா ஆட்டோ குறித்து இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலி கூறுகையில், ''நான் குழந்தை பருவத்தில் இருந்தே இயற்கை மீது தீராக்காதல் கொண்டவன். இயற்கையை பாதுகாக்காவிட்டால், வருங்காலத்தில் நாம் பெரும் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியது வரும்.

எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பூங்கா ஆட்டோவை நான் உருவாக்கினேன். 'டிரிப்' முடிந்து ஒவ்வொரு பயணிகளை இறக்கி விடும்போதும், இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறேன்.

ஆட்டோவை பூங்காவாக மாற்ற 25 ஆயிரம் ரூபாய் செலவானது. இதற்காக நான் யாரிடமும் உதவி கேட்கவே இல்லை. அத்துடன் 25 ஆயிரம் ரூபாய் செலவானது பற்றி கவலைப்படவும் இல்லை. இந்த செலவு தகுதியானதுதான். மக்கள் என் ஆட்டோவை பார்க்கின்றனர். இதில், பயணிக்கின்றனர்.

இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. இது ஒன்றே போதும். இது எனக்கு அருமையான உணர்வை தருகிறது'' என்றார். தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பலரும், இப்ராஹிம் இஸ்மாயில் டம்போலியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








