27 ஆண்டுகளில் 60 பேரின் உயிரை காப்பாற்றியது இதற்குதான்... ஆசிரியர் சொல்லும் நெகிழ்ச்சி காரணம்...
கடந்த 27 ஆண்டுகளில் 60 பேரின் உயிரை, ஆசிரியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். எதற்கும் கைக்குட்டையை தயாராக வைத்து கொள்ளுங்கள். அவர் சொல்லும் காரணம், ஒருவேளை உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடக்கூடும்.
கடந்த 27 ஆண்டுகளில் 60 பேரின் உயிரை, ஆசிரியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். எதற்கும் கைக்குட்டையை தயாராக வைத்து கொள்ளுங்கள். அவர் சொல்லும் காரணம், ஒருவேளை உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடக்கூடும்.

சாலை விபத்துக்களின் காரணமாக உலகிலேயே அதிக அளவிலான உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை, சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், அவர்கள் காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதனை மருத்துவ ரீதியாக 'கோல்டன் ஹவர்' என்பார்கள்.

ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலானோர் முன்வருவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதென்றால், நம்மில் பலருக்கும் உடனே தயக்கம் வந்து விடுகிறது.

போலீஸ், கேஸ் என அலைய வேண்டியதிருக்கும் என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு தயங்காமல் உதவி செய்யலாம் என உச்சநீதிமன்றமே அறிவித்து விட்டது. அவ்வாறு உதவி செய்யும் நபர்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் கூட, சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதென்றால், நம்மில் பலருக்கு இன்னமும் தயக்கம் உள்ளது. ஆனால் மனோஜ் அப்படிப்பட்டவர் அல்ல. கண் முன்னே ஏதேனும் விபத்தை கண்டு விட்டால், முதலில் ஓடிவருவது மனோஜாகதான் இருக்கும்.

ஏதோ உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது என்பதற்காக, சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு மனோஜ் ஓடி ஓடி உதவி செய்து வருகிறார் என சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு, கடந்த 1991ம் ஆண்டில் இருந்து மனோஜ் உதவி செய்து வருகிறார்.

27 வருடங்கள் கடந்து சென்று விட்டன. இந்த 27 வருடங்களில், சுமார் 60 உயிர்களை மனோஜ் காப்பாற்றி உள்ளார். சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க செய்வதை, மனோஜ் தலையாய கடமையாக கொண்டுள்ளார்.

இதைதான் 'கோல்டன் ஹவர்' என மேலே குறிப்பிட்டுள்ளோம். சாலை விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

நம்மில் பெரும்பாலானோர் செய்ய மறுக்கும் இந்த உன்னதமான நல்ல காரியத்தைதான், மனோஜ் கடந்த 27 வருடங்களாக செய்து கொண்டிருக்கிறார். சரி, யார் இந்த மனோஜ் என்கிறீர்களா? உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்தான் மனோஜ். கோச்சிங் சென்டர் நடத்தி வரும் இவர் அடிப்படையில் ஒரு ஆசிரியர்.

தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு, பாடம் மட்டுமல்லாது, விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நற்பண்பையும் ஊட்டி வளர்த்து வருகிறார் மனோஜ். இத்தகைய சுய நலமற்ற நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதே இவர் மாணவர்களுக்கு உரைக்கும் முதல் பாடம்.

1991ம் ஆண்டில் இருந்து இன்று வரை, விபத்துக்களில் சிக்கிய 60 பேர் மனோஜால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அந்த 60 பேர் மட்டுமல்லாது, அவர்களின் குடும்பத்தினரும் என்றென்றும் மனோஜூக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள்.

சாலை விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு மனோஜ் இப்படி ஓடி ஓடி உதவி செய்வதற்கு பின்னால், வலி நிறைந்த ஒரு சோக கதை மறைந்துள்ளது. பலரின் உயிரை காப்பாற்றியிருந்தாலும், ஒற்றை உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்ற சோகம் மனோஜின் மனதை துளைத்து கொண்டுள்ளது.

அவர் பெயர் பிரமோத் திவாரி. இன்று சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்து கொண்டிருக்கும் மனோஜின் உயிர் நண்பர் இவர். மனோஜ் இன்று 60 பேரை காப்பாற்றியதற்கு காரணகர்த்தாவே பிரமோத் திவாரிதான்.

அது 1991ம் ஆண்டு. அப்போதுதான் அந்த கோரமான சம்பவம் நடைபெற்றது. வேலையை முடித்து விட்டு, அந்த களைப்பில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார் பிரமோத் திவாரி. அப்போது வாகனம் என்ற பெயரில் ஒரு அதிவேக அரக்கன் அங்கு வந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்றது அந்த துயரம். அதிவேகத்தில் வந்த வாகனம், பிரமோத் திவாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. சுமார் 2 மணி நேரம் கடந்திருக்கும். அப்போதும் பிரமோத் திவாரியை யாரும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்கு நெருக்கமான ஒரு நபர், அதாவது எந்த தவறுமே செய்யாத ஒரு நபர், சாலையில் சரியான பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது அதிவேகத்தில் வந்த ஒரு வாகனம் மோதி விடுகிறது.

யாரோ செய்த தவறு அந்த நபரை பாதிக்கிறது. சாலையில் ரத்த வெள்ளத்தில் அடிபட்டு கிடக்கிறார். சுமார் 2 மணி நேரம் கடக்கிறது. அப்போதும் அவர் அப்படியே கிடக்கிறார். இந்த தகவல் உங்களுக்கு தெரியவந்தால், உங்கள் மனம் எவ்வளவு துடிதுடித்து போகும்.

அப்படிதான் மனோஜின் மனதும் துடிதுடித்து போனது. இனி நடந்த சம்பவங்களை மனோஜ் விவரிக்கிறார். ''அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால்தான் எனது ஆருயிர் நண்பன் பிரமோத் திவாரி பரிதாபமாக உயிரிழந்தான். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் இது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

யாராவது ஒருவர் பிரமோத் திவாரியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால், அவனை காப்பாற்றியிருக்க முடியும். தகவல் அறிந்து நான் மருத்துவமனைக்கு சென்றேன். அந்த கோலத்தில் அவனை கண்டதும் எனது மனம் வெறுத்து விட்டது.

எனது நண்பன் பிரமோத் திவாரி 2 முறை கண்களை திறந்தான். என்னிடம் ஏதோ சொல்ல முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. அவன் என்ன சொல்ல வந்திருப்பான்? என்பதை நினைத்து எனது மனம் இன்றும் வெதும்பி கொண்டிருக்கிறது.

இதன்பின்புதான் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் உதவி செய்யும் நபர்களின் முகங்களில் எல்லாம் எனது நண்பன் பிரமோத் திவாரியை நான் பார்க்கிறேன்.

எனது மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், எனது ஆருயிர் நண்பனை என்னால் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்பதுதான். அந்த வலி ஆறாத வடுவாக என்னை உருத்தி கொண்டே இருக்கிறது. பிறரை காப்பாற்றுவதன் மூலமாக அந்த வலியை குறைத்து கொண்டிருக்கிறேன்'' என்றார் கண்ணீருடன்.

விபத்தில் சிக்கியவர்களை பார்த்து பரிதாப்படுவதுடன் ஒரு 'உச்' கொட்டி விட்டு சென்று விடுவதே நம்மில் பலரின் வழக்கம். ஆனால் யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா? நமது பாசத்திற்குரிய குடும்பத்தினர், நண்பர்களுடன் நாம் சேர்ந்து வாழ்ந்து விட மாட்டோமா? என அவரின் மனம் துடித்து கொண்டிருக்கும்.

இதை உணர்ந்துதான் தன்னால் இயன்ற உதவிகளை அனைவருக்கும் செய்து கொண்டிருக்கிறார் மனோஜ். மனோஜை பற்றிய செய்தியை படித்து விட்டு, யாரேனும் ஒருவர் அவரைப்போல் தன்னை மாற்றி கொண்டால் போதும். அதுவே இந்த செய்திக்கு கிடைத்த மகத்தான வெற்றி.


Click it and Unblock the Notifications