துயரம் சுத்தி, சுத்தி அடிக்குது... கலெக்டர் ஆகுவதற்கு முன்பே இப்படியா நடக்கனும் - 50 லட்ச ரூபாய் கார் பறிமுதல்
சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் முயற்சியாக சமீப காலத்தில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மிக அருமையான சட்டங்களுள் ஒன்று, அரசு வாகனங்களில் சைரன் (Siren) எனப்படும் அதிக இரைச்சல் உடன் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளை பயன்படுத்தக் கூடாது என்பதாகும். இந்த சட்டம் ஆனது பிரதமரின் வாகனங்களுக்கு கூட பொருந்தும். போலீஸ், இராணுவம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் மட்டுமே அவசரகால சூழலை கருத்தில் கொண்டு சைரன் விளக்குகள் அனுமதிக்கப்படுகின்றன. மறுப்பக்கம், பெக்கான் (Beacon) எனப்படும் குறைந்த ஒலியை எழுப்பக்கூடிய சிறிய அளவிலான எச்சரிக்கை விளக்குகள் அரசு வாகனங்களில் அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால், புனேவில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி ஒருவர் தனது காரில் பெகான் விளக்குகளை பொருத்தியப்படி சென்றுள்ளார். மேலும், பயிற்சியை இன்னும் நிறைவு செய்யாத அவரது காரில் 'மஹாராஷ்டிரா அரசாங்கம்' என்கிற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த அதிகாரியின் மீது புனே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது விலையுயர்ந்த கார் அதிரடியாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள இந்த ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியின் பெயர் பூஜா கேத்கர் (Pooja Khedkar). இவரது விலையுயர்ந்த ஆடி கார் தற்சமயம் புனேவின் சாடுர்ஷ்ருங்கி காவல் நிலையத்தின் வளாகத்திற்குள் பலத்த பாதுகாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புனே போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டில் தற்சமயம் இருக்கும் இந்த ஆடி கார் மீது மோட்டார் வாகன சட்டம் 207இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புனே போக்குவரத்து பிரிவின் போலீஸ் கமிஷ்னர் ரோஹிதாஸ் பவர் கூறுகையில், "சிவப்பு பெகான் விளக்கை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக வாகனத்தை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். காரின் ஆவணங்களை ஆராயும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார். காரின் நம்பர் பிளேட்டை வைத்து விசாரித்து பார்த்ததில், இது தனியார் பொறியியல் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள காரின் ஆவணங்களை சரிப்பார்க்க பூஜா கேத்கரின் குடும்பத்தினரை புனே போலீசார் அணுகியுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, தனியார் காரில் பெகான் விளக்குகளை பயன்படுத்தியதற்காக பூஜா கேத்கருக்கு நேரடியாக போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
காரின் ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில், இந்த ஆடி கார் மீது ஏற்கனவே 21 அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளதையும், இதன் மூலமாக சுமார் ரூ.27,000 வரையில் அபராத தொகை செலுத்தப்பட்டு உள்ளதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். ஆனால், இந்த அபராதங்களில் எதுவும் நிலுவையில் இல்லை, அனைத்தும் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன. இருப்பினும், இந்த காரில் நிறைய போக்குவரத்து விதிமீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது.
பூஜா கேத்கரை பற்றி கூற வேண்டுமென்றால், 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 841வது இடத்தை பிடித்தவர். இதன் மூலமாக, ஐஏஎஸ் பயிற்சி பெறும் தகுதியை பெற்ற பூஜா கேத்கர் தற்சமயம் புனேவில் 24 மாத பயிற்சி காலத்தில் உள்ளார். பயிற்சி முடிவதற்கு முன்னதாக பெக்கான் விளக்குகள் பொருத்தப்பட்டதற்காக, தற்போது புனே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பூஜா கேத்கரின் ஆடி ஏ4 என்கிற லக்சரி செடான் கார் ஆகும்.
பழைய தலைமுறை ஆடி ஏ4 காரை பூஜா கேத்கர் பயன்படுத்தி வந்துள்ளார். 2022 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நியூ ஜென்ரேஷன் ஆடி ஏ4 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.46.02 லட்சத்தில் இருந்து ரூ.54.58 லட்சம் வரையில் உள்ளன. பிரீமியம், பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என 3 விதமான வேரியண்ட்களில் இந்த ஆடி செடான் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னும் ஐஏஎஸ் பயிற்சி முடிக்காத பூஜா கேத்கர், இப்போதே ஐஏஎஸ் அதிகாரிகளை காட்டிலும் பந்தா காட்டுவதாக நிறைய பேர் தெரிவிக்கின்றனர். அத்தகைய செயல்பாடுகளினால், பூஜா கேத்கர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த வரிசையில் தற்போது, பெக்கான் விளக்குகளை காரில் பயன்படுத்தியதற்காக வழக்கில் சிக்கியுள்ளார். இனி என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








