ரூ.300 கோடி மோசடி பணத்தில் சொகுசு கார்களை வாங்கி குவித்த சென்னை வாலிபர் கைது!
போலி ஆவணங்கள் மூலமாக ரூ.300 கோடி மோசடி செய்து சொகுசு கார்களை வாங்கி வலம் வந்த சென்னையை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்கள் மூலமாக ரூ.300 கோடி மோசடி செய்த சென்னையை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புடைய மஸேரட்டி சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னையை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் ரெட்டி. கோபாலபுரத்தில் உள்ள பள்ளியில் படித்து முடித்த இவர் ஆஸ்திரேலியாவில் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தார். இந்த நிலையில், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.

இதற்காக, இவர் நூதன திட்டத்துடன் மோசடியில் இறங்கி உள்ளார். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விலை மதிப்பு மிக்க இடங்களையும், வீடுகளையும் அதிக வாடகைக்கு எடுத்துள்ளார். சில மாதங்கள் அதிக வாடகையை கொடுத்து அதன் உரிமையாளர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார்.

அதன்பின்னர், அதே உரிமையாளர்களிடம் அதிக பணம் தருவதாக அந்த இடத்தை மீண்டும் குத்தகைக்கு எடுப்பது வழக்கம். பின்னர், அந்த இடத்தின் மதிப்பை உயர்த்தி, போலி ஆவணங்கள் மூலமாக அந்த இடத்திற்கு வங்கிகளில் பல கோடி கடன் பெற்றுவிட்டு தலைமறைவாகிவிடுவார்.

இதேபோன்று, பல சொகுசு கார்களையும் கடனில் வாங்கிவிட்டு தலைமறைவாகிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஹர்ஷவர்தன் ரெட்டி. வங்கிகளில் வலை வீசி தேடியும் பலன் இல்லை.

இந்த நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தனது வழக்கு சம்பந்தமாக விசாரிக்க ஹர்ஷவர்தன் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு வந்த ஹர்ஷவர்தன் ரெட்டியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவர் வந்த ரூ.3 கோடி மதிப்புடைய மஸேரட்டி சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மோசடி செய்த பணத்தில் ரூ.4.5 கோடி மதிப்புடைய ஃபெராரி கலிஃபோர்னியா ஸ்போர்ட்ஸ் கார், மஸேரட்டி குவாட்ரோபோர்ட்டே கார், ஆடி கார்களை வாங்கி குவித்து பயன்படுத்தி வந்துள்ளார்.

ஆனால், அந்த கார்களுக்கு மாதத் தவணை கட்டாததால், கடன் கொடுத்த வங்கிகள் அந்த கார்களை பறிமுதல் செய்துவிட்டன. அதேநேரத்தில், மஸேரட்டி காரை மட்டும் வங்கிகளின் கண்ணில் காட்டாமல் பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது அந்த காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளில் கார் மற்றும் வீட்டு அடமானக் கடன் பெறுவதற்காக மூன்று பான் கார்டுகளையும், இரண்டு பாஸ்போர்ட்டுகளையும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், விலை உயர்ந்த கார்களை கடனில் வாங்கியவுடன், இருப்பிடத்தை மாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஹர்ஷவர்தன் ரெட்டி.

இளம் வயதிலேயே உழைக்காமல் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இப்போது திகார் ஜெயிலுக்கு வழி தேடிக் கொண்டுள்ளார் ஹர்ஷவர்தன் ரெட்டி.


Click it and Unblock the Notifications








