உள்நாட்டிலேய தயாரிக்கப்படும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்!
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலுக்கான பெட்டிகள் சென்னையிலுள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கின்றன.
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலுக்கான பெட்டிகள் சென்னையிலுள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கின்றன. இந்த ரயில் பெட்டிகள் மேலை நாடுகளுக்கு இணையான தரத்தில் இருககும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது ஐரோப்பிய ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து உரிமம் பெற்று அதிவேக ரயில் பெட்டிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரயில் பெட்டிகள் சதாப்தி, ராஜ்தானி மற்றும் அதிவிரைவு ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், அதிவேக ரயில் பெட்டிகளை சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்க இருக்கிறது இந்திய ரயில்வேத் துறை. இந்த அதிவேக ரயில் பெட்டிகள், மேலை நாடுகளுக்கு இணையான தரத்துடன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

இந்த அதிவேக ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகள் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றும் ரூ.6 கோடி மதிப்புடையது. ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களின் உரிமம் பெற்று இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளை இவை 40 சதவீதம் குறைவான விலை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு ரயிலும் ரூ.100 கோடி மதிப்புடையதாக இருக்கும்.

அதேநேரத்தில், தரத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது. அலுமினிய பாடி பேனல்களுடன் இலகு எடை கொண்டதாக இந்த ரயில்கள் பெட்டிகள் தயாரிக்கப்படும்.

இந்த ரயில் பெட்டிகளின் மற்றொரு விசேஷம் மிக சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். சேர் கார் வசதியுடன் வடிவமைக்கப்படும் இந்த ரயில் பெட்டிகளில் நெருக்கடி இல்லாத பயண அனுபவத்தை பெற இயலும். பயணிகளுக்கு தேவையான நவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஒவ்வொரு அதிவேக ரயிலும் 16 பெட்டிகள் கொண்டதாக உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. படிப்படியாக அனைத்து பிரிமியம் சதாப்தி ரயில்களிலும் இந்த நவீன ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த ரயில் பெட்டிகள் கொண்ட அதிவேக ரயில்கள் அதிக பிக்கப் கொண்டதாகவும், அதிர்வுகள் இல்லாமல் மிக சொகுசானதாகவும் இருக்கும். வளைவுகளில் வேகத்தை குறைக்காமல் செல்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறையும்.

அதிகபட்ச வேகத்தில் செல்லும்போது அலுங்கல் குலுங்கல் அதிகம் இல்லாமல் செல்லும் விதத்தில் மிக நவீன சஸ்பென்ஷன் மற்றும் ஆக்சில்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

வரும் ஜூன் மாதம் இந்த அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அப்போது, இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெறும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications