லாரியில் யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லப்பட்டது இவ்வளவு பெரிய பொருளா!! இந்தியாவில் மேட்-இன்-சீனா இரயில்...
டிரைவர் இல்லாமல் இயங்கக்கூடிய மெட்ரோ இரயில் பெங்களூரை லாரியில் வந்தடைந்து உள்ளது. எங்கிருந்து இந்த மெட்ரோ இரயில் கொண்டுவரப்பட்டு உள்ளது? இந்த இரயிலை உருவாக்கியது யார்? எப்போது இது பெங்களூரில் செயல்பட உள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
உலகம் தன்னிச்சையாக இயங்கக்கூடிய வாகனங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. முற்றிலுமாக விபத்துகளை தவிர்க்க வேண்டுமென்றால், தன்னிச்சையாக செயல்படக்கூடிய வாகனங்களின் பயன்பாடு அவசியம் என கூறுபவர்களும் இருக்கின்றனர். தானாக இயங்கக்கூடிய பைக் & காரை மக்கள் அனைவரும் உபயோகப்படுத்தும் காலம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆட்டோமேட்டிக் தரத்தில் கொண்டுவரும் பணிகள் ஏற்கனவே உலகம் முழுவதும் ஆரம்பமாகி விட்டன. நம்மூரில் இயங்கும் மெட்ரோ இரயில்கள் நிறைய நாடுகளில் தன்னிச்சையாக டிரைவர் இல்லாமல் இயங்கக்கூடியவைகளாக உள்ளன. நம் இந்தியாவிலும் அத்தகைய டிரைவர்-லெஸ் மெட்ரோ இரயில்களை கொண்டுவரும் பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த வகையில், பெங்களூரின் நம்ம மெட்ரோ சேவையில் விரைவில் டிரைவர்-இல்லா மெட்ரோ இரயில் இணையவுள்ளது. பெங்களூர் நம்ம மெட்ரோ நிர்வாகத்துக்கு இத்தகைய மெட்ரோ இரயில்களை சீனாவை சேர்ந்த CRRC நான்ஜிங் புழன் என்ற நிறுவனம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டிலேயே கையெழுத்தாகி விட்டது. சுமார் ரூ.1,578 கோடி முதலீட்டில் 216 இரயில் பெட்டிகளை பெங்களூருக்கு மேற்கூறப்பட்ட சீன நிறுவனம் அனுப்பி வைக்கவுள்ளது.
இதில், முதல் மெட்ரோ இரயில் பெட்டி சீனாவில் இருந்து கப்பல் மூலமாக இந்தியாவிற்கு வந்துள்ளது. பெங்களூருக்கு அருகே உள்ள துறைமுகம் என்பதால், இந்த இரயில் பெட்டிகள் கடந்த வாரத்தில் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தன. அதன்பின், வழக்கமான ஆவண சரிப்பார்ப்புகள் முடிக்கப்பட்டு, லாரியில் தற்போது பெங்களூரை முதல் இரயில் பெட்டி வந்தடைந்துள்ளது.
எதிர்பார்த்ததை போல், பெங்களூரின் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அருகே உள்ள ஹெப்பாகோடி டிப்போவுக்கு இந்த டிரைவர்-லெஸ் இரயில் பெட்டி கொண்டுவரப்பட்டு உள்ளது. பெங்களூரில் தொடர்ந்து புது, புது இடங்களில் மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நீண்ட வருடங்களாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஆர்வி சாலை மற்றும் பொம்மசந்த்ரா இடையேயான மஞ்சள் லைன் மெட்ரோ இரயில் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன.

ஜெயதேவா மருத்துவமனை, சில்க் போர்டு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி என தெற்கு பெங்களூரின் பரபரப்பான பகுதிகளை இணைக்கும் விதத்தில் கொண்டுவரப்படும் மஞ்சள் லைனில் டிரைவர்-லெஸ் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை மெட்ரோவை போல், பெங்களூர் மெட்ரோவிலும் தற்போது வரையில் டிரைவர்-இல்லா மெட்ரோ இரயில் பயன்பாட்டில் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், தற்போதைக்கு இந்தியாவிலேயே டெல்லி மெட்ரோவில் மட்டுமே டிரைவர்-லெஸ் மெட்ரோ இரயில் இயக்கத்தில் உள்ளது. மும்பை மெட்ரோவில் இத்தகைய மெட்ரோ இரயிலை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூலை மாதத்திற்குள் மும்பையில் டிரைவர்-லெஸ் மெட்ரோ இரயிலை சோதனை செய்வதற்கான டிராக் அமைக்கும் பணிகள் நிறைவு பெறவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரைவர்-லெஸ் மெட்ரோ இரயிலை டெல்லிக்கு அடுத்து கொண்டுவருவது யார் என்பதில் மும்பை மெட்ரோ மற்றும் பெங்களூர் மெட்ரோ இடையே போட்டி நிலவி வருகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில் பெங்களூரில் முதலாவதாக வந்துவிடும். ஏனெனில், பெங்களூரில் டிராக் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன மற்றும் தற்போது இரயிலும் சீனாவில் இருந்து வர துவங்கிவிட்டன.


Click it and Unblock the Notifications








