ஜப்பான் புல்லட் ட்ரெயின் எல்லாம் ஓரமா நில்லு... ஒரே நாளில் உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!
உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தரமான சம்பவம் ஒன்றை இந்தியா செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே துறையை நடத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால் இந்திய ரயில்வே குறித்து இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக இந்திய ரயில்களின் கால தாமதம் மற்றும் வேகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்தான் அதிகமாக காணப்படுகின்றன.

இந்தியாவில் ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராது, மிகவும் மெதுவாக செல்லும் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் நம்மில் பலரிடமும் உள்ளது. ஆனால் மறுபக்கம் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் புல்லட் ரயில்கள் அதிவேகத்தில் பறந்து கொண்டுள்ளன. அந்த புல்லட் ரயில்களை பார்த்து இந்தியர்கள் பலரும் ஏக்க பெருமூச்சு விட்டு கொண்டுள்ளனர்.

நிலைமை இப்படி இருக்கும்போது வேகத்தில் ஜப்பானின் புல்லட் ரயிலை இந்தியாவின் ரயில் ஒன்று விஞ்சியுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அசூரன் பட பாணியில் சொல்வதென்றால், நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுதான் நெசம்! ஆம், உண்மைதான். ஜப்பானின் புல்லட் ரயிலை இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) வீழ்த்தியுள்ளது.

வந்தே பாரத் ரயிலானது, முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ரயில் ஆகும். ட்ரெயின் 18 (Train 18) என்ற பெயராலும் வந்தே பாரத் ரயில் அழைக்கப்படுகிறது. ஜப்பானில் தயாரிக்கப்பட்ட புல்லட் ரயில் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 55 வினாடிகளில்தான் எட்டுகிறது. ஆனால் 'மேட் இன் இந்தியா' வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டியுள்ளது.

அதாவது ஜப்பானின் புல்லட் ரயிலுடன் ஒப்பிடும்போது, 3 வினாடிகளுக்கு முன்னதாகவே மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எட்டி சாதனை படைத்துள்ளது. இது மற்ற நாடுகளில் புல்லட் ரயில்களை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அரசின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் (Ashwini Vaishnaw) இந்த தகவலை தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தற்போது சமூக வலை தள பக்கங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்வதை இந்த வீடியோ நமக்கு மிகவும் தெளிவாக காட்டுகிறது.

இந்த வீடியோவில் செல்போன் ஒன்றும், முழுக்க முழுக்க தண்ணீர் நிரம்பிய டம்ளர் ஒன்றும் வைக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த செல்போனில் ரயில் என்ன வேகத்தில் பயணம் செய்து கொண்டுள்ளது? என்பதை நாம் காணலாம். இதன்படி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 180-183 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்கிறது.

ஆனால் அந்த செல்போனுக்கு அருகே வைக்கப்பட்டுள்ள டம்ளரில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை. இது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான். ''மணிக்கு 180 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்தபோதும், டம்ளரில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை. இது இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய தருணம்'' என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.

இது இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் தரத்தையும், வேகத்தையும் எடுத்து காட்டுவதாக உள்ளது. பேடிஎம் நிறுவனர் (Paytm Founder) விஜய் சேகரும் (Vijay Shekhar) இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார். ''இது உண்மையிலேயே மிகவும் பெருமையான தருணம்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தானியங்கி கதவுகள் (Automatic Doors) மற்றும் ஏசி வசதி செய்யப்பட்ட கோச்கள் போன்ற வசதிகள் எல்லாம் இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கின்றன. வரும் காலங்களில் இந்திய ரயில்வே துறை இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். இதற்கிடையே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications