90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ம.பி முதல்வர்- வைரல் வீடியோ!!
மத்திய பிரதேசத்தில் 90 வயது உடைய பெண்மணி ஒருவர் அட்டகாசமாக காரினை ஓட்டி சமூக வலைத்தள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகி உள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பிலாவாலி பகுதியை சேர்ந்தவர் ரேஷாம் பாய் டன்ஸ்வர். இவருக்கு 90 வயதாகிறதாம். இவர் பழைய மாருதி 800 காரை தற்போது சாலையில் ஓட்டியது தான் வைரலாகி உள்ளது.
குறிப்பாக மத்திய பிரதேசத்தில் இதுகுறித்த வீடியோவினை அம்மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சின் சவுகான் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், வாழ்க்கையில் ஆசையை நிறைவேற்றி கொள்ள வயது வரம்பு இல்லை என நம் அனைவருக்கும் இவர் ஊக்கமளித்துள்ளார்.

வயது என்பது ஒரு எண். உங்கள் வாழ்க்கையை வாழ உங்களுக்கு ஆர்வம் தேவை என குறிப்பிட்டுள்ளார். ரேஷாம் பாய் பிரபல டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், என்ணுடைய மகளும், பேத்தியும் கார் ஓட்டுவதில் திறமை வாய்ந்தவர்கள். இதனாலேயே எனக்கும் இந்த திறன் வந்தது. அதுமட்டுமில்லாமல் எனக்கு கார் ஓட்டுவது பிடிக்கும். நான் கார்கள் மட்டுமல்ல டிராக்டர்களையும் இயக்குவேன் என்றார்.

மத்திய பிரதேச முதல்வர் இணையத்தில் பகிர்ந்து கொண்டதை அடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகியது. பலர் இந்த வீடியோவை தங்களது சொந்த இணைய பக்கங்களில் பதிவிட்டனர். அதேநேரம் 90 வயது உடைய பாட்டி காரை பொது சாலையில் இயக்கியதற்கு சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கார் ஓட்டுவதற்கு குறைந்தப்பட்ச வயது (18+) மட்டுமே உள்ளதே தவிர்த்து, இந்த வயதிற்கு மேல் உள்ளவர்கள் கார்களை ஓட்டக்கூடாது, அத்தகையவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது என அரசாங்கம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் சமீப காலமாக இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க நாடாளும் கட்சி திட்டமிட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் 50 வயதை கடந்தவர்களுக்கு நிரத்தர ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவது இல்லை. கமர்ஷியல் வாகனங்களுக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். தற்சமயம் மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலை 75 வயது வரையில் மட்டுமே செய்யும் அளவிற்கு சட்டம் கொண்டுவர தயாராகி வருகிறது.

மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் பல அரசியல்வாதிகள், பிரபலங்களின் வயது 70ஐ கடந்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் பொதுமக்களின் பாதுகாப்பை தான் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வெளியாகி நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்துகளின் எண்ணிக்கை இன்னும் உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். ஒன்றல்ல, ரெண்டல்ல கடந்த ஆண்டில் மட்டும் 1.20 லட்ச விபத்துகள் நாடு முழுவதும் அரங்கேறியுள்ளன. இதில் மேலும் நம்மை அதிர்ச்சியாக்குவது என்னவென்றால், இதில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போது நடந்தவை தான் அதிகமாம்.

அரசாங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த விபரங்களின்படி, நம் நாட்டில் கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 328 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3.92 லட்சம் பேர். இதற்கு நாம் அரசாங்கத்தை மட்டுமே குறை கூறி தப்பிக்க முடியாது.

இவ்வாறு அதிகப்படியான வயதுடைய பெண்மணியிடம் காரை பொது சாலையில் கொடுப்பது என நாமும் தான் சில சமயங்களில் காரணமாக இருக்கின்றோம். அவர் சிறப்பாக கூட காரை ஓட்டட்டும், அதற்காக நாம் அவரது வயதை மறந்துவிடக்கூடாது. இந்த வயதில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

விபத்திற்கு நாமே வழிவகுப்பது கூடாது. அதுமட்டுமின்றி இவ்வாறான செயல்கள் சாலை விதிகளுக்கு உண்டான மதிப்பையும் மக்களிடத்தில் குறைவல்லன. கடந்த ஆண்டில் விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இவ்வாறு இருக்க, ஹிட் அண்ட் ரன் அதாவது மோதலை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வழக்குகள் மட்டும் 41 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.


Click it and Unblock the Notifications








