பென்ஸ் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு மாட்டு வண்டியில் ஆபீஸ் போன தொழிலதிபர்! எல்லாரும் ஆடிப்போய்டாங்க
தொழிலதிபர் ஒருவர், பென்ஸ் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு மாட்டு வண்டியில் ஏறி ஆபீஸ் போன சம்பவம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி ஒரு மாநிலத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று. ஏனெனில் உற்பத்தி கூடங்கள் மற்றும் குடோன்கள் ஆகியவை இந்த பகுதியில்தான் அமைந்திருக்கும். மூலப்பொருட்களை இறக்குவதற்கும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வெளியில் கொண்டு செல்வதற்கும் இந்த பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் வருவதும், போவதுமாக இருக்கும்.

கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக இயங்குவதால், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் சாலைகளின் நிலை வெகு விரைவிலேயே மோசமாகி விடும். அங்கு பணியாற்ற கூடிய தொழில்துறையினர் அரசிடமும், அதிகாரிகளிடமும் எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும், மோசமான நிலையில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படுவதில்லை.

இப்படி மோசமான சாலைகளால் மனம் வெறுத்து போன தொழிலதிபர் ஒருவர் மெர்சிடிஸ் பென்ஸ் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு, மாட்டு வண்டியில் ஏறி அலுவலகம் சென்று சேர்ந்துள்ளார். மிகவும் வித்தியாசமான இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அத்துடன் இந்தியா முழுவதும் அனைவரின் கவனத்தையும் இச்சம்பவம் ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள பல்லாடா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமெடுத்து வரும் நிலையிலும், மறுபக்கம் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

இதன்படி பல்லாடா பகுதியிலும் தற்போது ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டுள்ளது. எனவே தொழில் அதிபரும், பல்லாடா தொழில்துறை அமைப்பின் தலைவருமான பிரமோத் ஜெயின் என்பவர், தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சமீபத்தில் அலுவலகம் சென்று கொண்டிருந்தார். ஆனால் அப்பகுதியில் சாலை மிகவும் மோசமாக இருந்ததால், அவரால் தனது காரில் அலுவலகம் வரை சென்று சேர முடியவில்லை.

எனவே பாதி வழியில் சாலையோரமாக அவர் காரை ஓரங்கட்டி நிறுத்தினார். அதன்பின் மாட்டு வண்டியை வரவழைத்த அவர், அதில் ஏறி அலுவலகம் சென்று சேர்ந்தார். தற்போது அந்த வீடியோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பகுதியில் சாலை மிகவும் மோசமானதொரு நிலையில் இருப்பதை நம்மால் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

எந்த வாகனத்தில் பயணம் செய்வதற்கும் அந்த சாலை ஏற்றதல்ல. சாலை உடைந்து, குண்டும், குழியுமாகவும், சேறு, சகதிகள் நிரம்பியும் காணப்படுகிறது. சாலைகள் மோசமாக இருப்பதால், ஊரடங்கு தளர்விற்கு பிறகு, தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சேர்வதில் கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாக பிரமோத் ஜெயின் கூறியுள்ளார்.

மற்றொரு வீடியோவில் இந்த பிரச்னை தொடர்பாக பிரமோத் ஜெயின் விரிவாக பேசியுள்ளார். நீண்ட நாட்கள் லாக்டவுன் முழுமையாக அமலில் இருந்ததால், யாரும் பல்லாடா பகுதிக்கு வரவில்லை. ஆனால் தற்போது லாக்டவுனில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், கிட்டத்தட்ட அனைத்து தொழிற்கூடங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால், அங்குள்ள அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களுக்கு செல்வதில் பலரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற மோசமான சாலையில் நடந்து செல்வது என்பது சாத்தியமே இல்லாத காரியம் எனவும் பிரமோத் ஜெயின் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

பெரும்பாலான தொழிலதிபர்கள் தாங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு முன்னதாக வெகு தொலைவில் காரை பார்க்கிங் செய்து விட்டு செல்வதாகவும் பிரமோத் ஜெயின் கூறியுள்ளார். அந்த பகுதியில் வேலை செய்து வரும் பலரும், மோசமான சாலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரமோத் ஜெயின் பேசியிருக்கிறார்.

எனவே சாலைகளின் தரத்தை மேம்படுத்தி, தொழில் அதிபர்களும், ஊழியர்களும் தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு செல்வதை எளிதாக்கும்படி, அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோசமான சாலைகளை உடனடியாக சரி செய்யாவிட்டால், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவாம்.
தொழிற்சாலைகள் தொடர்ந்து பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. அந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களும் தேவைப்படும். எனவே தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் மிகவும் முக்கியமானது. இதை அரசு அதிகாரிகள் உணர்ந்து, சாலைகளை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

தொழில் அதிபரான பிரமோத் ஜெயின், வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரை சாலையோரமாக பார்க்கிங் செய்து விட்டு, மாட்டு வண்டியில் ஏறி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் காரை பார்க்கிங் செய்த இடத்திற்கும், அலுவலகத்திற்கும் இடையே எவ்வளவு தொலைவு? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சாலையில் செல்வது சவாலான காரியம்தான்.
Image Courtesy: Mojo


Click it and Unblock the Notifications








