கார் கதவை எஸ்ஐ தவறாக திறந்ததால் கீழே விழுந்த 2 பேர்... கேள்வி கேட்டவரை லத்தியால் தாக்கிய கொடூரம்
காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பைக்கில் வந்தவரை சரமாரியாக தாக்கும் அதிர்ச்சிகரமான காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமூக வலை தளங்களில் சிறிய காணொளி ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில், காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் மஹிந்திரா பொலிரோ காரின் கதவை திறக்கிறார். திடீரென காரின் கதவு திறக்கப்பட்டதால், அவ்வழியாக ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் வந்த இரண்டு பேர், கதவில் மோதி கீழே விழுகின்றனர்.

பொதுவாக கார் கதவுகளை திறக்கும்போது, முன்னும், பின்னும் ஒரு முறை பார்த்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அவ்வழியாக வருபவர்கள், காரின் கதவில் மோதி இப்படி கீழே விழுந்து அடிபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி பின்னால் யாராவது வருகிறார்களா? என்பதை பார்க்காமலேயே மஹிந்திரா பொலிரோ கார் கதவை திறந்ததாக கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதனால்தான் பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேரும் தடுமாறி கீழே விழுந்தனர். ஆனால் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த நபர் உடனடியாக எழுந்து விட்டார். எழுந்த உடனேயே காவல் துறை அதிகாரியிடம், பின்னால் பார்க்காமல் கதவை திறந்தது குறித்து அவர் தட்டிகேட்க சென்றார். அடுத்து என்ன நடந்தது? என்பதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. பைக்கில் வந்த நபர் கேள்வி எழுப்பிய உடனேயே, மஹிந்திரா பொலிரோ காரின் பின்பக்க கதவை திறந்த காவல் துறை அதிகாரி, லத்தியை வெளியே எடுத்து, கேள்வி எழுப்பிய நபரை சரமாரியாக தாக்க தொடங்கி விட்டார்.

அந்த சமயத்தில் மற்றொரு காவல் துறை அதிகாரி அங்கே வருகிறார். பைக்கில் வந்த நபரை தாக்கி கொண்டிருந்த காவல் துறை அதிகாரியை அவர் சற்றே சமாதானம் செய்வது போல் தெரிகிறது. ஆனாலும் அவர் சமாதானம் அடைந்தது போல் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வலி தாங்காமல், பைக்கில் வந்த நபர் கையெடுத்து கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.

பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பைக்கில் வந்த நபரை தாக்கிய காவல் துறை அதிகாரி உதவி ஆய்வாளர் பதவியில் இருப்பதாகவும், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பதுடன் கார் கதவுகளை பாதுகாப்பாக திறப்பது எப்படி? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நாமும் அதனை தெரிந்து கொள்வது இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும். பொதுவாக வலது பக்க கதவை திறக்க வலது கையையும், இடது பக்க கதவை திறக்க இடது கையையும்தான் பலர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதற்கு பதிலாக வலது பக்க கதவை திறக்க இடது கையையும், இடது பக்க கதவை திறக்க வலது கையையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் தானாகவே திரும்பும். எனவே பின் பகுதியையோ அல்லது ஓஆர்விஎம்களையோ நீங்கள் கண்டிப்பாக பார்த்து விடுவீர்கள். அப்போது யாராவது பின்னால் வந்தால் உங்களுக்கு தெரிந்து விடும். இதனை விளக்கும் காணொளியை நீங்கள் கீழே காணலாம்.
இந்த எளிமையான யுக்தியின் மூலம் பல விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்பது உறுதி. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற யுக்திகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், கார் கதவை பாதுகாப்பாக திறக்கும் இந்த எளிமையான யுக்தியை சொல்லி கொடுங்கள்.


Click it and Unblock the Notifications








