சினிமாவை மிஞ்சும் சம்பவம்... பைக்கில் இருந்து லாரிக்கு தாவி கொள்ளை... உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையிலான கொள்ளை சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் போன்ற திரைப்படங்களில், கார் ஸ்டண்ட் காட்சிகள் அதிகளவு இடம்பெறும். அந்த காட்சிகள் பயம் கலந்த ஆச்சரியத்தை நமக்கு ஏற்படுத்தும். எனினும் அப்படிப்பட்ட ஸ்டண்ட்களை நிஜ வாழ்க்கையில் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது. ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் திரைப்பட தொடர்களில் இடம்பெற்ற எரிபொருள் திருட்டு காட்சி மிகவும் பிரபலம்.

வேகமாக சென்று கொண்டிருக்கும் லாரியில் இருந்து எரிபொருளை திருடுவதற்காக, காரில் இருந்து அதன் மீது நடிகர்கள் தாவுவார்கள். இந்த காட்சி உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்புகிறோம். தற்போது அதே போன்ற தைரியமான ஸ்டண்ட்டை மூன்று பேர் அடங்கிய குழு செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் அந்த காணொளியும் மிக வேகமாக பரவி வருகிறது. வாகன போக்குவரத்து பெரிதாக இல்லாமல் காலியாக இருந்த நெடுஞ்சாலை ஒன்றின் மைய பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் இருந்து ஒரு நபர், லாரியின் மீது தாவுவதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. அந்த வழியாக வந்த மற்றொரு காரில் இருந்து இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர் லாரியின் மீது தாவிய நபர், போல்ட் கட்டர் மூலமாக பூட்டை உடைத்து கன்டெய்னரின் கதவை திறக்கிறார். அவர் மட்டுமல்லாது இன்னும் இரண்டு பேர் பைக்கில் வருவதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. லாரியின் மீது தாவிய நபருக்கு அவர்கள் உதவி செய்கின்றனர். இந்த காட்சிகளை பதிவு செய்த கார், பைக்கிற்கு அருகே வந்ததும், பைக்கில் இருந்த நபர், ஒருவிதமாக சைகை செய்கிறார்.

''உன் வேலையை பார்த்து கொண்டு முன்னால் போ'' என்பது போல் அந்த சைகை இருக்கிறது. எனினும் அந்த காரின் ஓட்டுனர் முன்னால் சென்று, கொள்ளை நடக்கிறது என லாரி ஓட்டுனரை எச்சரித்தார். ஆனால் அதன்பின்னர் என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. இந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கண்டெய்னரில் இருந்து சமையல் எண்ணெய்யை அவர்கள் திருடியுள்ளனர்.

பொதுவாக இது போன்ற கண்டெய்னர்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாகதான் கொண்டு செல்லப்படும். எனினும் அதன் பூட்டை எப்படி உடைக்க வேண்டும்? என்பதை பைக்கில் வந்த கொள்ளையர்கள் நன்கு அறிந்து வைத்திருந்ததை போல் தெரிகிறது. ஆனால் இந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை கிடையாது.
இதேபோன்று பைக்கில் இருந்து லாரி மீது தாவி கொள்ளையடிக்க முயற்சி செய்யும் மற்றொரு சம்பவத்தின் காட்சியும் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது. திரைப்படங்களில் இதுபோன்ற ஸ்டண்ட் காட்சிகள், முறையான பயிற்சி பெற்ற தொழில்முறை கலைஞர்களை கொண்டு செய்யப்படும். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், தலை கவசம் கூட அணியவில்லை. சிறிய தவறான செய்கை கூட அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். மேலும் சாலையில் பயணம் செய்யும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். அதே சமயம் கண்டெய்னருக்கு பின்னால் என்ன நடக்கிறது? என்பதை லாரியின் ஓட்டுனரால் பார்க்க முடியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஒரு சில வெளிநாடுகளில் லாரி உரிமையாளர்கள் கேமராக்களை பொருத்தி கொள்கின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதா? அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் இதுபோல் பல்வேறு குற்றச்செயல்களில் நடக்கின்றன. குறிப்பாக வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக புகார்கள் உள்ளன. இதற்காக பல வித்தியாசமான வழிகளை கொள்ளையர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஒரு சில கொள்ளையர்கள் உதவி கேட்பது போல், வாகனங்களை நிறுத்துகின்றனர். அவர்களுக்கு உதவலாம் என இரக்க குணத்துடன் வாகனங்களை நிறுத்துபவர்களிடம் இருந்து பணம், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையர்கள் திருடுகின்றனர். அத்துடன் ஆட்கள் இல்லாமல் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் கண்ணாடிகளை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை திருடுவதாகவும் புகார் உள்ளது.


Click it and Unblock the Notifications








