டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்க சொல்லிட்டாங்களா? அதோட விலை எவ்வளவு தெரிஞ்சா இப்படி சொல்லகூட நமக்கு மனசு வராது!
யுட்யூபில் வீடியோவை போட்டே ஃபேமஸான நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர் ஆவார். இவருக்கு தமிழகத்தில் ஃபேன் பட்டாளம் அதிகம். வெறும் யுட்யூபில் பைக் ஓட்டும் வீடியோவை போட்டே அவர் 2கே கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நபராக மாறிவிட்டார். இந்த ஃபேன் பேஸை தக்க வைத்துக் கொள்ள அவர் அவ்வப்போது சில அக்கப்போரில் ஈடுபடுவது உண்டு.
குறிப்பாக, அவர் பைக் ஸ்டண்ட் செய்வதற்கே ஃபேமஸானவராக இருக்கின்றார். பைக் ஸ்டண்ட் மற்றும் சாகசம் செய்வது என்பது தவறில்லை. ஆனால், அதை பொதுவெளியில், குறிப்பாக மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செய்வது என்பது தண்டனைக்கு உரிய செயலாக இருக்கின்றது. இதைதான் சற்றும் தயங்காமல் செய்து வருகின்றார், டிடிஎஃப் வாசன்.

அந்தவகையில், அண்மையில் அவர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பைக் ஸ்டண்டில் ஈடுபட்டு இருக்கின்றார். அப்போதே அவருடைய பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. மிக மோசமான விபத்து இது ஆகும். இந்த விபத்தில் டிடிஎஃப் வாசன் ஓட்டி வந்த விலை உயர்ந்த பைக் உரு தெரியாமல் சிதைந்து போனது.
இருப்பினும், வாசனுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சிறிய கை முறிவு மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, வாகன ஸ்டண்டில் ஈடுபட்டது என பல்வேறு பிரிவுகளின்கீழ் காஞ்சிபுரம் போலீஸார் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிந்து அவரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்றே அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார். இந்த நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் சார்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது. முன்னதாக இவர் வழங்கிய ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கிய ஜாமீன் மனு நீதிபதிகளின் முன் விசாரணைக்கு வந்திருக்கின்றது. நீதிபதி சிவி கார்த்திகேயன் அமர்விலேயே இந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த நேரத்தில், தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் கிஷோர் ஆகினார்.
மேலும், டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை எதிர்த்து தன்னுடைய வாதங்களை அவர் முன் வைத்தார். அவர் முன் வைத்த கருத்துகளின் விபரம், "மனுதாரர் டிடிஎஃப் வாசனுக்கு 45 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்கள் யுட்யூபில் இருக்கின்றனர். இவர்களும் வாசனின் செயல்களை பின் தொடர நேரிடலாம்.
அவர் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு கவசங்களை அணிந்து தன் உயிரைப் பாதுகாத்துக் கொண்டார். ஆனால், அவருடைய ஃபாலோவர்கள் சிலர் 2 லட்ச ரூபாய் பைக்கை வைத்துக் கொண்டு, பாதுகாப்பு கவசம் எதுவும் இன்றி, டிடிஎஃப் வாசனை போல ஸ்டண்ட் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட்ட சிலர் விபத்தில் கை, கால்களை இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர். மேலும், ஒரு சிலர் டிடிஎஃப் வாசனின் பைக் ஸ்டண்ட் யுக்தி மற்றும் நேர்த்தியை அறிந்துக் கொண்டு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், டிடிஎஃப் வாசனுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஓர் பாடமாக அமைய வேண்டும்" என்கிற கருத்தை அவர் முன் வைத்தார்.
இவை அனைத்தையும் பதிவு செய்த நீதிபதி கார்த்திகேயன், விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களையும் தூண்டும் வகையில் மனுதாரர் செயல்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்தினார். இதுபோன்ற செயல்களுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என கூறி டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவல் சிறையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, டிடிஎஃப் வாசனுக்கு ஏற்பட்டு இருக்கும் காயங்களுக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். மேலும், அவரின் யுட்யூப் சேனலை மூடிவிட்டு, பைக்கையும் தீயிட்டு எரிக்க வேண்டும் என்கிற கருத்தையும் நீதிபதி முன் வைத்தார். டிடிஎஃப் வாசன் சம்பவத்தின்போது பயன்படுத்தியது சுஸுகி ஹயபுசா ஜென் 3 வகை பைக் மாடல் ஆகும்.
இந்த பைக்கை அவர் கடந்த ஜூன் மாதத்திலேயே டிடிஎஃப் டெலிவரி எடுத்தார். இந்த பைக்கை அவர் வாங்கி ஒரு வருடம்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக விபத்தில் சிக்க வைத்து உருக்குலைந்து போக செய்துவிட்டார். அத்துடன், காவல்துறையின் கடுமையான நடவடிக்கையிலும் அவர் சிக்கி இருக்கின்றார்.
சுஸுகி ஹயபுசா ஜென் 3 வகை பைக்கின் விலை ரூ. 17 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். மேலும், அவர் விபத்தின்போது அணிந்து வந்தை தலைக் கவசத்தின் விலை ரூ. 1.50 லட்சத்திற்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இதேபோல், அவர் அணிந்து வந்த ரைடர் உடையின் விலை லட்சக் கணக்கிலேயே உள்ளது.
இத்தகைய அதிக விலைக் கொண்ட பாதுகாப்பு கவசங்களின் காரணத்தினாலேயே டிடிஎஃப் வாசன் விபத்திற்கு தாமாக எழுந்து நடக்கும் வகையில் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார். ஆனால், இந்த அளவு விலை உயர்ந்த பாதுகாப்பு கவசங்களை அவரின் ஃபாலோவர்களால் கொள்முதல் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
இதனால்தான் மற்றவர்களைத் தூண்டும் வகையில் அவருடைய செயல் இருந்ததாகக் கூறி தற்போது தொடர்ச்சியாக வாசனின் ஜாமீன் மனுவு ரத்து செய்யப்பட்டு வருகின்றது. அதேநேரத்தில், வாசனின் ஃபாலோவர்கள் பலர் அவருக்கு குரல் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். சமூக வலைதளங்கள் வாயிலாக கண்டனங்களை எழுப்பிய வண்ணம் அவர்கள் இருக்கின்றனர். விரைவில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை அவர்கள் மீதும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஸ்டண்ட் தடை செய்யப்பட்ட செயல் ஆகும். ஆனால், அதனை பாதுகாப்பான பகுதிகளில் செய்துக் கொள்ள அனுமதி உண்டு. அதாவது, ஸ்டண்ட் செய்வதற்கு என அமைக்கப்பட்டு இருக்கும் டிராக் மற்றும் தனியார் இடங்களில் மட்டுமே வாகன ஸ்டண்டுகளை செய்துக் கொள்ள முடியும். பொதுவெளியில் இந்த செயல்களை செய்ய நேரிட்டால் டிடிஎஃப்-இன் நிலைமை உங்களுக்கும் என்பதை மறவாதீர்கள்.


Click it and Unblock the Notifications