2 படம் பாக்கற கேப்ல மதுரை-பெங்களூர் போயிரலாமா! ஆம்னி பஸ்கள் பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் வந்தே பாரத் ரயில்!
இந்தியாவில் தற்போதைய நிலையில் 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express Trains) இயங்கி கொண்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை-பெங்களூர், சென்னை-கோவை, கோவை-பெங்களூர் மற்றும் சென்னை-திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த வரிசையில், தமிழகத்திற்கு புதிதாக 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிடைக்கவுள்ளன. இதில், மதுரை-பெங்களூர் (Madurai-Bangalore) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றாகும். மதுரை-பெங்களூர் இடையேயான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி (August 31) முதல் இயங்கவுள்ளது.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தொடங்கி வைக்கவுள்ளார். மதுரை-பெங்களூர் இடையேயான சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவை இந்த ரயில் வெறும் 7.45 மணி நேரத்தில் கடந்து விடும். இதன் மூலம் மதுரை-பெங்களூர் இடையே இயங்கவுள்ள அதிவேக ரயில் என்ற பெருமையை இது பெறவுள்ளது.

தற்போதைய நிலையில் மதுரை-பெங்களூர் இடையேயான தொலைவை அதிவேகமாக கடக்கும் ரயில், 9.30 மணி நேரம் எடுத்து கொள்கிறது. எனவே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் அறிமுகம் மூலமாக, மதுரை-பெங்களூர் இடையே பயணிக்கும் பயணிகள், 1.45 மணி நேரத்தை சேமிக்க முடியும்.
மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் 1 மணிக்கு பெங்களூர் கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், இரவு 9.45 மணிக்கு மதுரை சென்றடையும்.

இரு மார்க்கங்களிலும், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் பெங்களூர் கே.ஆர்.புரம் ஆகிய ரயில் நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும். திருச்சி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் தலா 5 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில், மற்ற ரயில் நிலையங்களில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் சேர் கார் வகுப்பில் பயணம் செய்வதற்கு 1,200-1,300 ரூபாய் கட்டணமாக (Ticket Price) நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எக்ஸிக்யூட்டிவ் க்ளாஸ் வகுப்பில் பயணம் செய்வதற்கு 1,800-2,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை-பெங்களூர் தவிர, சென்னை எக்மோர்-நாகர்கோவில் (Chennai Egmore-Nagercoil) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், வரும் ஆகஸ்ட் 31ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தமிழகத்திற்கு புதிதாக 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவிருப்பது, ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மதுரை-பெங்களூர் இடையே பயணம் செய்யும், ஐடி ஊழியர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போன்றோருக்கு இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. இந்த ரயிலின் வருகை, ஆம்னி பஸ்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








