நம்ம தமிழ்நாட்டில்தான்... ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்... எந்த ஊரில் தெரியுமா?
ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மகிழ்வித்து மகிழ் என்ற இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ இறைச்சி வாங்கினால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத சிறப்பு சலுகையாக இந்த சலுகையை அறிவித்துள்ளனர். இங்கு ஒரு கிலோ இறைச்சி வாங்கினால், ஒரு டோக்கன் வழங்கப்படும்.

அதனை வைத்து ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொள்ளலாம். இந்த சலுகையை ஆடி மாதம் முழுவதும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த சலுகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம், பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்பது போன்ற சலுகைகள் பல முறை அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் திருமண விழாக்களில் மணமக்களுக்கு பெட்ரோல் பல முறை பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் வகையில் அதனை மணமக்களுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். உலகிலேயே பெட்ரோலுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரி காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தற்போது கூட வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இது வாகன ஓட்டிகளுடன், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் கூட, அதன் முழுமையான பலன் இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு கிடைப்பதில்லை என்பதே உண்மை.

எனவே பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி கொண்டே உள்ளனர். அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது கொண்டு வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் வருமான இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர பல்வேறு மாநில அரசுகள் விரும்பவில்லை.

அத்துடன் வரிகளும் குறைக்கப்படாமல் இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்து வாகன ஓட்டிகள் சிந்தித்து வருகின்றனர். அதற்கேற்ப எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சார்பில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுவதால், வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








