எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய மதுரை மாணவர்... 1 கிமீ இயக்க எவ்வளவு செலவு ஆகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
மதுரை கல்லூரி மாணவர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு லிட்டர் எரிபொருள் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருவதால், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இல்லத்தரசிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதுதான் இதற்கு காரணம். எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாது.

இந்த சூழலில் மதுரை நகரை சேர்ந்த தனுஷ் குமார் என்ற கல்லூரி மாணவர், சூரிய சக்தியில் இயங்க கூடிய எலெக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த எலெக்ட்ரிக் பைக்கில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் தொடர்ச்சியாக 50 கிலோ மீட்டர்கள் வரையில் இந்த எலெக்ட்ரிக் பைக்கை இயக்க முடியும்.

பெட்ரோல் பைக்குடன் ஒப்பிடும்போது இந்த எலெக்ட்ரிக் பைக்கை இயக்குவதற்கு ஆகும் செலவு மிக மிக குறைவு. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்வதற்கு வெறும் 1.50 ரூபாய் மட்டுமே ஆகும். அதாவது ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 0.03 பைசா மட்டுமே செலவாகும்! உண்மையில் இது மிக சிறப்பான விஷயம்.

இந்த எலெக்ட்ரிக் பைக் 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்க கூடியது. ஆனால் மதுரை போன்ற நகரங்களில் இயக்குவதற்கு இந்த வேகமே போதுமானது என மாணவர் தனுஷ் குமார் தெரிவித்துள்ளார். அவரது இந்த கண்டுபிடிப்பிற்காக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் பலர் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கியுள்ளனர். அத்துடன் பெட்ரோல் பைக்குகளை கூட மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றியுள்ளனர். நமது இந்திய மாணவர்களின் திறமைகளுக்கு இச்சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே ஆகும்.

இதுபோன்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தின் உதவியும், வழிகாட்டுதலும் கிடைத்தால், அவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். மேலும் பொதுமக்களுக்கும் குறைந்த செலவில் இயக்க கூடிய எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக நாம் வெளிநாடுகளை சார்ந்து இருப்பதும் குறையும்.


Click it and Unblock the Notifications