கடைகள் மூடி இருந்தால் என்ன, வீடுகளை தேடிவரும் தமிழக அரசின் ‘நகரும்’ கடைகள்!!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக உள்ளதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். சீனாவில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் கட்டுப்பாட்டில் தான் உலகமே கடந்த ஆண்டில் இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் பரவ துவங்கிய கொரோனா வைரஸின் முந்தைய அலையை காட்டிலும் இரண்டாவது அலையின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசாங்கங்கள் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களாக முன்பு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 24ஆம் தேதி முடிய இருந்த நிலையில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வரும் மே 31ஆம் தேதி வரையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் தேதி போடப்பட்ட ஊரடங்கில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லாததினால் அது பலன் அளிக்காத நிலையில், கடந்த 15ஆம் தேதி கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இதுவும் பெரிதாக பலன் அளிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் எந்தவொரு தளர்வுகளும் இல்லை. இன்று முதல் ஒரு வாரத்திற்கு கடைகள் எதுவும் திறக்கப்படாது. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் மற்றும் கால்நடை மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும்.
உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பார்சல் வழங்கப்படுமாம். இதனால் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் கடந்த சனி மற்றும் ஞாயிறில் திருவிழா அளவிற்கு பெரும் கூட்டம் கூடி வாங்கியதை செய்திகளில் பார்க்க முடிந்தது.

இருப்பினும் காய்கறி, பழங்களை ஒரு வாரத்திற்கு தேவையானதை ஒரே நாளில் வாங்கி போட முடியாது. அன்றாடம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது வாங்க வேண்டும். இல்லையென்றால் சில காய்கறி, பழங்கள் கெட்டு போய்விடும்.

இதனாலேயே 'நகரும் மார்கெட்' எனப்படும் வாகனங்களில் காய்கறி & பழங்களின் விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மதுரையில் மாநகராட்சியின் சார்பில் காய்கறி விற்பனை வாகனங்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் மதுரை நகர்பகுதியில் வசிப்போர் எந்தவொரு சிரமமும் இன்றி வீட்டில் இருந்தப்படியே காய்கறிகளை வாங்க முடியும். இதற்கு அரசாங்கமே உதவ முன்வந்திருப்பது பலரால் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. இதேபோல் காய்கறி விற்பனை வாகனங்களை மற்ற மாநகராட்சிகளிலும் அரசாங்கமே தகுந்த விலையில் இயக்கினால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








