விமானத்தையே மணமேடையாக மாற்றிய மதுரை இளைஞர்... பறக்கும் விமானத்தில் திருமணம்... ஏன் தெரியுமா? இதோ முழு விபரம்!
அரசின் கெடுபிடியைச் சமாளிக்க மதுரையைச் சேர்ந்த ஓர் இளைஞர் தனது திருமணத்தை பறக்கும் விமானத்தில் செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் திங்கள் (மே 24) முதல் தமிழகத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மிக தீவிரமாக பரவி வரும் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களை (காய்கறி, மளிகை பொருட்கள்) விற்பனைச் செய்யும் கடைகள்கூட இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதேசமயம், மக்களின் தேவையை உணர்ந்து வாகனங்கள் வாயிலாக நாடுமாடும் காய்கறி மற்றும் பழக் கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நூற்றுக்கணக்கான காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய ஆட்டோ மற்றும் குட்டி யானை எனப்படும் டாடா ஏஸ் வாகனங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு, தமிழகத்தில் மிகக் கடுமையான கெடுபிடிகள் நிலவி வரும்நிலையில், இந்த கெடுபிடியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர், தனது திருமணத்தை மிக விநோதமான முறையில் செய்து முடித்துள்ளார். அவர், தனது திருமணத்தை பறக்கும் விமானத்தில் செய்து முடித்திருக்கின்றார்.

திருமணங்கள் முன்கூட்டிய திட்டமிடப்பட்டிருப்பதால் மிகக் குறைந்த நபர்களுடன் மட்டுமே திருமண நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக ஐம்பது நபர்களுடன் திருமணம் நடைபெறலாம் என கூறப்பட்டநிலையில், பலர் இக்காரணத்தைக் கூறி விதிகளை அதிகம் மீறுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, திருமணத்திற்கான இ-பதிவில் லேசான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருமண பத்திரிக்கையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவிற்கு விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆகையால், பத்திரிக்கையில் பெயர் இடம் பெற்றவர்களால் மட்டுமே திருமணத்திற்கு செல்லும் நிலை உருவாகியிருக்கின்றது.

பெயர் இடம் பெறாதவர்களால் திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தனது திருமணத்தில் அரங்கேறக் கூடாது என்பதற்காகவே மதுரையைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடு வானில் செய்திருக்கன்றார். ஆமாங்க, தனது முக்கிய சொந்தங்கள் அனைவருமே இடம்பெற வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மதுரையைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்தை விமானத்தில் செய்திருக்கின்றார்.

மதுரை-பெங்களூரு ஸ்பைஸ் ஜெட் விமானத்திலே திருமணம் நடைபெற்றிருக்கின்றது. சரியாக, விமானம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மேல் பறக்கும்போது இளைஞர் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியிருக்கின்றார்.

விமானத்தில் ஒட்டு மொத்தமாக 161 பேர் பயணித்ததாகவும், அவர்கள் அனைவரும் மணமக்களின் உறவினர்கள் என்று கூறப்படுகின்றது. மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் விநோத திருமணம் பற்றிய தகவலே தற்போது இணையத்தின் டாப் ட்ரெண்டிங் ஆகும்.

டுவிட்டரில் இவர்களின் திருமண வீடியோ அதிக வேகத்தில் வைரலாகி வருகின்றது. பதிவிடப்பட்ட ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் பார்வையிட்டிருக்கின்றனர். தொடர்ந்து இவ்வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகின்றது. தளர்வுகளற்ற பொதுமுடக்கம் தற்போது மாநிலம் முழுவதும் அமலில் இருப்பதால் பெரும்பாலான சாலைகள் வாகனம் இன்றி காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








