Madurai Metro ரயில் திட்டம் ரெடி! இதான் ரூட், மொத்தம் 18 ஸ்டேஷன்கள் வேற என்னென்ன விஷயம் வருது தெரியுமா?
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வெளியிட்டார். அறிவிப்பில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் அந்த திட்டத்திற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மேலாண்மை இயக்குநராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரையில் மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாகப் பல துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் இந்த திட்டம் குறித்த பல முக்கியமான தகவல்களைச் சொன்னார். மதுரை மெட்ரோ ரயில் திட்டம் என்பது மதுரையில் உள்ள திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை மொத்தம் 31 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது இந்த ரூட்டில் உள்ள இடங்களில் சர்வே, குடிநீர் குழாய், நெடுஞ்சாலை இடங்கள், பூமிக்கு கீழே செல்லும் மின் வயர்கள் குறித்து அந்தந்த அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை வழங்கச் சொல்லி கேட்டிருப்பதாகவும், அதை மாற்றியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கேட்டுள்ளதாகக் கூறினார்.

தற்போது உள்ள திட்டத்தின்படி மதுரை திருமங்கலத்திலிருந்து திருநகர், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார், மீனாட்சியம்மன் கோவில், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பழங்காநத்தம், வசந்தநகர் பகுதியிலிருந்து கோரிப்பாளையம் வரை பூமிக்குக் கீழே மெட்ரோ ரயில் பாதை செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வைகை ஆற்றிற்குக் கீழே மெட்ரோ ரயில் பாதையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 31 கி.மீ தூரத்தில் 5 கி.மீ தூரம் மட்டும் பூமிக்கு அடியில் செல்லும்படி உருவாக்கப்படவுள்ளது. மீதம் உள்ள 26கி.மீ பூமிக்கு மேல் செல்கிறது. இதில் மொத்தம் 18 ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளது.

பூமிக்கு அடியில் பாதை அமைக்கும் போது மதுரை சித்திர திருவிழாவான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா மற்றும் தேரோட்ட திருவிழாவிற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறினார். இந்த திட்டத்திற்கான முழு அறிக்கை வரும் ஜூன் மாதம் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் வரும் 2024ம் ஆண்டு இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கப்படும் என்றும், இது 2027ம் ஆண்டு முடிவுக்கு வந்து மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வரும்படி திட்டமிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக மத்திய,மாநில அரசுகள் தலா 20 சதவீத நிதியையும், நிதி நிறுவனங்கள் 60 சதவீத நிதியையும் வழங்கவுள்ளதாகவும் கூறினார்.
இது வெறும் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தான். இந்த திட்டம் முடிந்த 3 மாதத்திலேயே 2வது கட்ட மெட்ரோ ரயிலுக்கான பணிகள் துவங்கப்படும். இது கட்டப்புளிநகர் பகுதியிலிருந்து, மதுரை விமான நிலையத்தை இணைக்கும் வகையில் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அடுத்தாக 3வது கட்ட பணி திட்டம் என்பது மதுரை நாகமலைப புதுக்கோட்டை பகுதியிலிருந்து, வீரகனூர் பகுதியை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பாதையை அமைக்கும் திட்டமும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்டமாக இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மதுரையில் வரவுள்ள மெட்ரா ரயிலை பொருத்தவரை ஒரு ரயிலில் மொத்தம் 900 பேர் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இதற்காக மெட்ரோ ரயிலில் 3 பெட்டிகள் இணைக்கப்படும் என்றும். 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற ரீதியில் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வைகை ஆற்றுக்குக் கீழே ரயில் பாதை அமைக்கப்படும் போது சுமார் 20 மீட்டர் ஆழத்தில் வழித்தடத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் திட்ட இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









