இனி தைரியமா மின்சார வாகனங்களை வாங்கலாம்... இதைதான் ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தோம்..!
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரு தனியார் நிறுவனங்கள் தரமான நடவடிக்கை ஒன்றை இந்தியாவில் மேற்கொள்ள இருக்கின்றன. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேக் காணப்படுகின்றது. அதேசமயம், அண்மைக் காலங்களாக இதன் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இதன் விற்பனைக் குழந்தைப் பருவத்திலேயே இருப்பதாக ஆட்டோத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்வாகனங்களின் இந்த நிலைக்கு, அவற்றின் உச்சபட்ச விலை மற்றும் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாததே முக்கிய காரணியாக இருக்கின்றன. குறிப்பாக, சார்ஜிங் நிலையங்கள் இல்லாததே மக்கள் மத்தியில் மின்சார வாகனத்தை வாங்க தயக்கம் காட்ட மிக முக்கியமான காரணமாக தற்போது இருக்கின்றது.

இந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்களை இரு பிரபல நிறுவனங்கள் நிறுவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை ஆங்கில நியூஸ்18 தளம் வெளியிட்டிருக்கின்றது.

இமேட்ரிக்ஸ்மைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மெஜெந்தா இவி சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே இந்த தரமான சம்பவத்தை இந்தியாவில் நிகழ்த்த இருக்கின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் சமீபத்தில் கையெழுத்திட்டநிலையில், இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'க்யூஒய்கே பிஓடி' (QYK POD) என்ற பெயரில் இந்த சார்ஜிங் மையங்கள் விரைவில் செயல்பட இருக்கின்றன. முதலில் மும்பை, எம்எம்ஆர் போன்ற மஹாராஷ்டிரா மாநிலத்தின் மிக முக்கியமான நகரங்களிலேயே இந்த கூட்டணி சார்ஜிங் நிலையங்களை நிறுவ இருக்கின்றன. இதைத்தொடர்ந்தே நாட்டின் பிற முக்கிய நகரங்களில் சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான பணியில் அவை ஈடுபடும்.

இவ்வாறு, நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சார சார்ஜிங் நிலையங்களை இரு நிறுவனங்களும் நிறுவ இருக்கின்றன. ஆகையால், எதிர்காலத்தில் மின்சார வாகன உரிமைதாரர்கள் எந்தவொரு கவலையுமின்றி சாலையில் பயணிக்கும் நிலை இந்தியாவில் உருவாக இருக்கின்றது. மேலும், இந்த நிலை புதிய மின்சார வாகனங்களை வாங்குவோரையும் ஊக்குவிக்க உதவும்.

தடையில்லா பயன்பாட்டை உறுதிச் செய்யும் வகையில் 'க்யூஒய்கே பிஓடி' மின்சார சார்ஜிங் நிலையங்கள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. இதனை, பொது பயன்பாட்டிற்காக மட்டுமில்லாமல் தனியார் வாகன உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக சிறப்பு செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இது, சார்ஜிங் நிலையங்கள் எந்த மூலையில் அமைந்திருந்தாலும் அதனைக் காட்டிக் கொடுக்கும்.

நிறுவனங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்:
இ-மேட்ரிக்மைல் ஓர் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன வாடகை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் பயனர்கள் தங்கு தடையில்லாமல் புதிய சார்ஜ் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.

தற்போது மும்பையில் மட்டுமே சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், விரைவில் இந்தியாவின் 50க்கும் அதிகமான பகுதிகளில் தனது வாடகை வாகன சேவையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை 2021ம் ஆண்டிற்குள் மேற்கொள்ள இருப்பதாக காலக் கெடுவை நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மின்சார ஸ்கூட்டர், மின்சார பைக் மற்றும் மின்சார ஆட்டோ ரிக்ஷாக்ளை வாடகைக்கு விட அது திட்டமிட்டுள்ளது.

மேஜந்தா நிறுவனத்தைப் பற்றி பார்த்தோமேயானால், இது ஓர் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் தொழில்நுட்பம் சார்ந்து பணி புரியும் நிறுவனமாக இருக்கின்றது. இந்நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம், ஷெல் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் இயங்கி வருகின்றது. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கருவி, மென்பொருள் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.


Click it and Unblock the Notifications








