சொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா?
மஹாராஷ்டிரா காவல் துறை செய்திருக்கும் அதிரடி பற்றிய தகவலை அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்பதால், ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மஹாராஷ்டிராவில் மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மஹாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியுள்ளார். அத்துடன் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 11 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து, விதிமுறைகளை மீறியதாக, ஐபிசி செக்ஸன் 188-ன் கீழ் (அரசு அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு கீழ்படியாதது) மொத்தம் 1,61,821 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 29,990 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே சமயம் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 89,459 வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர முறைகேடான போக்குவரத்து தொடர்பாக 1,335 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால், தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மும்பையில் புதிய விதிமுறைகளை காவல் துறையினர் கொண்டு வந்துள்ளனர். இதன்படி உரிய காரணம் இல்லாமல், ஒருவர் தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் செல்லக்கூடாது. அப்படி சென்றால், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஆனால் அலுவலகம் செல்வோர் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக செல்வோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதிலும் காவல் துறையினர் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இடம் இல்லை என்பதாலும், வாகனங்கள் திருடப்பட்டு விடுமோ? என்ற அச்சம் காரணமாகவும், காவல் துறையினர் வாகனங்களை அவசர அவசரமாக உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டாலும் கூட, போலீசாரின் நடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

உரிய காரணம் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே அவசியம் இல்லாமல் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. இது காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, கொரோனா தொற்றில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








