மக்கள் கார் எல்லாம் வாங்கவே கூடாதுனு நெனைக்குறாங்களா என்ன...? வரிக்கு மேல் வரி விதிச்சுக்கிட்டே இருக்காங்க!
சி.என்.ஜி வாகனங்கள் (CNG Vehicles)-ஐ வாங்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல்/ டீசல் எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருளை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்களில் சிஎன்ஜியும் ஒன்றாக உள்ளது. இதனாலேயே சிஎன்ஜி எரிபொருள் மீதான வரியை முடிந்தவரையில் குறைவாக நிர்ணயிக்க முயற்சித்து வருகிறது. மாநில அரசாங்கங்களும் அதே எண்ணத்துடன் தான் உள்ளன என்றாலும், சில அரசாங்கங்கள் அதிக வருவாய்க்காக சிஎன்ஜி மீதான வரிகளை சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ஒரு மாநில அரசாங்கம் சிஎன்ஜி மீதான வரியை அதிகரிக்க போவதாக, தனது மாநில பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பெட்ரோல்/ டீசலுக்கான மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான செலவை குறைக்கும் பொருட்டும், பசுமையான போக்குவரத்தை கொண்டுவரும் முயற்சியாகவும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஏற்கனவே உச்சக்கட்டத்தை எட்டிவிட்ட போதிலும், நம் இந்தியாவில் இப்போதுதான் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. முழுவதும் எலக்ட்ரிக் வாகன போக்குவரத்தை நாம் அடைய இன்னும் பல வருடங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் கூட, பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்த கூடாது என்பதற்காக மத்திய அரசு வேறு சில திட்டங்களை வைத்துள்ளது.
அதுதான், சிஎன்ஜி மற்றும் எல்.பி.ஜி (LPG) ஆகும். வழக்கமான பெட்ரோல் என்ஜினை இந்த எரிவாயுகள் மூலமாக இயங்க வைக்கும் பணிகளில் அரசாங்கத்துடன் இணைந்து கார் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக முற்றிலும் மாசற்ற போக்குவரத்தை பெற முடியாது என்றாலும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம் என்பதுதான் மத்திய அரசின் திட்டம். இதனால்தான், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமின்றி சிஎன்ஜி மற்றும் எல்பிஜி-இல் இயங்கக்கூடிய வாகனங்களுக்கும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த புதிய முயற்சிகளை ஆதரிக்கும் பொருட்டு, அவற்றிற்கான வரிகளையும் முடிந்தவரையில் குறைவாக வைத்திருக்க முயற்சிக்கின்றன. இந்த நிலையில்தான், மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில அரசு தனது 2025-26ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான அஜித் பவார் பட்ஜெட்டை சட்டசபையில் மார்ச் 10ஆம் தேதி வாசித்தார்.
அதில் அவர் மாநில வளர்ச்சியை மையப்படுத்தி பல சிறப்பான திட்டங்களை அறிவித்தார். அவற்றுள் நமது கவனத்தை ஈர்த்தது, புதிய வாகனங்களை வாங்குவோர் மீது விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்படும் என்பதாகும். இதுகுறித்து பேசிய மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் அஜித் பவார், "இந்த பட்ஜெட்டில், வாகனங்களை வாங்குதலுக்கான வரிகளை நாங்கள் அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனால் இந்த வரிகள் ஏழை மக்களுக்கானவை அல்ல என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

உயர் ரக வாகனங்களை வாங்கி வரிகளை செலுத்தக்கூடியவர்கள் மட்டுமே இந்த வரிகளை செலுத்த வேண்டியிருக்கும்" என தெரிவித்தார். பொதுவாகவே, இவ்வாறு ஒவ்வொரு வருடமும் மாநில அரசாங்கங்கள் தங்களது மாநிலத்தில் வாகனங்களை வாங்குவதற்கான வரிகளை திருத்தம் செய்வது வழக்கமான ஒன்றே. மிகவும் அரிதாக சில நேரங்களில் வரிகள் குறைக்கப்பட்டாலும், பல நேரங்களில் அதிகரிக்கப்பட்டு தான் உள்ளன.
இருப்பினும், அப்போதும் எலக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி போன்ற வாகனங்களை வாங்குவதற்கான வரிகளில் பெரியதாக கை வைக்கப்படாது. ஆனால், மஹாராஷ்டிரா மாநில அரசு தனது 2025-26 பட்ஜெட்டில் அவற்றிற்கும் சேர்த்து வரிகளை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக, அடுத்த 1 வருடத்தில் மஹாராஷ்டிரா அரசுக்கு ரூ.1,500 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் அஜித் பவார் கணித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களுக்கான வரிகளை வெறும் 1% மட்டுமே மஹாராஷ்டிரா அரசு அதிகரித்துள்ளது. ஆனால், இந்த 1% அதிகரிப்பு அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாயை அதிகமாக பெற்றுத்தரும். அதேநேரம், டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களுக்கான வரியில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல், சிஎன்ஜி 2-வீலர்களுக்கான வரியிலும் மாற்றமில்லை.


Click it and Unblock the Notifications









