ஐகோர்ட் பிறப்பித்த அடுத்த அதிரடி உத்தரவு இதுதான்... கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கிய போலீசார்...
ஐகோர்ட் பிறப்பித்த அடுத்த அதிரடியான உத்தரவை தொடர்ந்து, போலீசார் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், உலகிலேயே மிகவும் அபாயரமான சாலைகளில் ஒன்றாக இந்திய சாலைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் சரிவர கடைபிடிப்பதில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த விதிமுறையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதிமுறை முறையாக அமல்படுத்தப்படாததால் நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தமிழக போலீசார் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் செய்யும் மற்றொரு விதிமுறை மீறல் தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுவதுதான். குறிப்பாக ப்ரஸ், போலீஸ், ஜட்ஜ் போன்ற ஸ்டிக்கர்களுடன் உலா வரும் தனியார் வாகனங்களை சாலைகளில் எளிதாக காண முடியும். இது போன்ற ஸ்டிக்கர்கள் மார்க்கெட்டில் மிக எளிதாக கிடைக்கின்றன.

பத்திரிக்கை, காவல் மற்றும் நீதி துறைகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூட இத்தகைய ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் போலியாக ஒட்டி கொள்கின்றனர். இதன் மூலம் சில சமயங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டாலும் கூட சில சமயங்களில் போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

எனவே கார்களின் விண்டு ஸ்கீரின், இரு சக்கர வாகனங்களின் மட்கார்டு மற்றும் நம்பர் பிளேட்களில் பலர் இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி கொள்கின்றனர். இந்த சூழலில் ப்ரஸ், போலீஸ் மற்றும் ஜட்ஜ் போன்ற துறைகள் தொடர்பான லோகோக்கள் மற்றும் எழுத்துக்கள் தனியார் வாகனங்களில் இடம்பெறக்கூடாது என பாம்பே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, ப்ரஸ், போலீஸ் மற்றும் ஜட்ஜ் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை மும்பை போலீசார் தொடங்கியுள்ளனர். இந்த தகவலை மும்பை போலீசிஸ் இணை கமிஷனர் (டிராபிக்) மதுகர் பாண்டே உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக டிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மோட்டார் வாகன விதிகளின் செக்ஸன் 134 (6) மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 177 ஆகியவற்றின்படி, தனியார் வாகனங்களில் ஓவியம், ஸ்டிக்கர் ஆகியவற்றை ஒட்டினால், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








