பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு.. இதனால அதோட விலை எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?..
இந்தியாவில் உள்ள அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் கவலையளிக்கக் கூடிய விஷயமாக பெட்ரோல், டீசல் விலை உள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ.100-க்கும் அதிகமான விலையிலும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு ரூ.92-க்கும் அதிகமான விலையிலும் விற்கப்படுகின்றது. இதே நிலையே இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது நிலவுகின்றது. இந்த அதிக விலை குறிப்பாக வாடகை வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை பெட்ரோல், டீசலுக்கு செலவாகுவதாக வாடகை வாகன ஓட்டிகள் பலர் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும், பெட்ரோல், டீசலின் விலை எப்போது குறையும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விதமாக அதற்கு விதிக்கப்படும் வரியை குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மஹராஷ்டிரா மாநில அரசே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து இருக்கின்றது.

அது எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்கும் விதமான நடவடிக்கையை முன்னெடுத்து இருக்கின்றது. மஹாராஷ்டிரா அரசின் இந்த முடிவால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே பலனடைய இருக்கின்றது. பெட்ரோல், டீசல் விலை சற்றே அங்கு குறை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 ஜூலை 1 முதலே அரசின் வாட் வரி குறைப்பு அமலுக்கு வர உள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு, மாநில பட்ஜெட் 2024 இல் தாக்கல் செய்யும் என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான அஜித் பவார் அறிவித்துள்ளார். மஹாராஷ்டிரா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பெட்ரோல் லிட்டருக்கு 65 காசுகள் வரையிலும், டீசல் லிட்டருக்கு 2.60 ரூபாய்களும் குறைய இருக்கின்றது.
குறிப்பாக இந்த மாற்றம் பிரஹன் மும்பை, தானே மற்றும் நவி மும்பை ஆகிய நகராட்சி பகுதிகளுக்கு பொருந்தும். மேலும், மஹாராஷ்டிரா அரசாங்கத்தின் இந்த முடிவால் மாநிலத்தின் கருவூலத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 200 கோடி இழப்பு ஏற்படும் கணிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அது வாட் வரி குறைப்பை அறிவித்து இருக்கின்றது.
அதேவேளையில், அரசின் இந்த நடவடிக்கை மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் இருக்கும். இதையே நோக்கமாகக் கொண்டு எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கோவா போன்றவை இந்த மாத தொடக்கத்தில் எரிபொருளின் விலையை உயர்த்தி மக்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்த நிலையில், மஹராஷ்டிரா அரசாங்கமோ விலையை குறைத்து சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
கோவா அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 21.5 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 17.5 சதவீதமாகவும் உயர்த்தியது. இதன் விளைவாக பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 1 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 36 பைசாக்களும் உயர்ந்தன. கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 3 வரை அதிகரித்துள்ளது.
இதேபோல், டீசல் லிட்டருக்கு ரூ. 3.5 வரை அதிகரித்துள்ளது. பெட்ரோலுக்கான வரியில் 29.84 சதவீதமும், டீசலுக்கு 18.44 சதவீதமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள நுகர்வோர் சந்தித்து வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், எரிபொருள் விலையைக் குறைக்கும் விதமாக மஹாராஷ்டிர அரசு வாட் வரியை குறைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹாராஷ்டிரா அரசின் இந்த முடிவு மற்ற மாநில மக்களிடையே பொறாமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் விலை உயர்வைக் கண்ட கர்நாடகா வாழ் மக்களிடையே இந்த தகவல் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தும் என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








