வெகு விரைவில் இந்தியாவில் 'ஹைப்பர் லூப்' சீறி பாயும்! 4 மணி நேர பயணம் வெறும் 25 நிமிடமாகிறது!
இந்தியாவில் ஹை டெக் ரயில் திட்டமான ஹைப்பர் லூப் தொழில்நுட்ப பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஹைப்பர் லூப் மூலமாக 4 மணி நேர பயணம் வெறும் 25 நிமிடங்களாக குறையும்.
இந்தியாவில் ஹை டெக் ரயில் திட்டமான ஹைப்பர் லூப் தொழில்நுட்ப பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஹைப்பர் லூப் மூலமாக 4 மணி நேர பயணம் வெறும் 25 நிமிடங்களாக குறையும். இதற்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதால், இந்தியாவில் வெகு விரைவில் ஹைப்பர் லூப் சீறி பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

போக்குவரத்து துறையில் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி கொண்டுள்ளன. இதனால் சலுப்பு தட்டி வந்த தொலைதூர பயணங்கள் எல்லாம் இன்று மிகவும் எளிமையாகி விட்டன. விமானம், அதிவேக ரயில்கள் போன்றவற்றினால்தான், தொலைதூர பயண நேரங்கள் வெகுவாக குறைந்திருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும் ஒரு புதிய தொழில்நுட்பம் வெகு வேகமாக உருவாகி கொண்டிருக்கிறது. ஹைப்பர் லூப்தான் அந்த தொழில்நுட்பம். காந்த விசையை பயன்படுத்தி, ஒரு குழாயினுள் அதிவேகமாக ரயிலை செலுத்துவதுதான் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம்.

ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், விமானத்தை விட 2 மடங்கு வேகத்தில் ரயிலை செலுத்த முடியும். ஹைப்பர் லூப் போக்குவரத்து மூலமாக மணிக்கு 1,200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிவேகமான போக்குவரத்து தொழில்நுட்பமாக கருதப்படும் ஹை டெக் ஹைப்பர் லூப் டெக்னாலஜி வெகு விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் அறிமுகமானால், தமிழகத்தின் சென்னையில் இருந்து திருச்சிக்கு வெறும் 30-35 நிமிடங்களில் சென்று விட முடியும்.

எனினும் முதலில் மகாராஷ்டிராவில், ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அம்மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களான மும்பை-புனே இடையே ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மும்பை-புனே நகரங்கள் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. தற்போது மும்பையில் இருந்து புனேவுக்கு பயணிக்க 4 மணி நேரம் ஆகிறது. ஆனால் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் அறிமுகமானால், 4 மணி நேர பயண நேரம் என்பது வெறும் 25 நிமிடங்களாக குறைந்து விடும்.

மும்பை-புனே என்ற இரு பெரும் வர்த்தக நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை குறைப்பதில், மகாராஷ்டிர அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. எனவே ஹைப்பர் லூப் என்ற நவீன ரயில் திட்டத்திற்காக, 'விர்ஜின் ஹைப்பர் லூப் ஒன்' என்ற நிறுவனத்தை மகாராஷ்டிர அரசு அணுகியுள்ளது.

'விர்ஜின் ஹைப்பர் லூப் ஒன்' நிறுவனம் அமெரிக்க நாட்டை சேர்ந்தது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்தான், அதன் தலைமையம் உள்ளது. எனவே பாஜக கட்சியை சேர்ந்தவரான மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அங்கு சென்றுள்ளார்.

'விர்ஜின் ஹைப்பர் லூப் ஒன்' சோதனை தளம் நிவேடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் அங்கும் சென்று, சோதனை தளத்தை பார்வையிட்டுள்ளார். அத்துடன் 'விர்ஜின் ஹைப்பர் லூப் ஒன்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராப் லியாடையும் சந்தித்துள்ளார்.

மும்பை-புனே வழிதடத்தில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம், மகாராஷ்டிரா அரசு மற்றும் 'விர்ஜின் ஹைப்பர் லூப் ஒன்' நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் இடையே ஏற்கனவே கையெழுத்தாகி விட்டது. இதன் தொடர்ச்சியாகதான் தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா சென்றுள்ளார்.

முன்னதாக மும்பை-புனே வழித்தடத்தில், ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பான ஆய்வு பணிகளையும், மகாராஷ்டிர அரசு தொடங்கி விட்டது. 'விர்ஜின் ஹைப்பர் லூப் ஒன்' நிறுவனமும் கூட, இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகளை எல்லாம் முடித்து விட்டது.

'விர்ஜின் ஹைப்பர் லூப் ஒன்' நிறுவனத்தின் பொறியாளர்கள் விரைவில் புனேவுக்கு வரவுள்ளனர். ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கு தேவையான 70 சதவீத பொருட்கள் மற்றும் மூலக்கூறுகள், மகாராஷ்டிர மாநிலத்திலேயே கிடைக்கிறது என்பது மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் அறிமுகமானால், மும்பை-புனே இடையேயான பயண நேரம் வெறும் 25 நிமிடங்களாக குறையும். இதன்மூலம் வேறு சில நன்மைகளும் உள்ளன. ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் அறிமுகமானால், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மக்கள் பயன்படுத்துதை தவிர்ப்பார்கள்.

இதன்மூலம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் வெளியிடும் ஆபத்தான பசுமை இல்ல வாயுக்களின் உழிழ்வு ஆண்டுக்கு 1,50,000 டன் வரை குறைக்கப்படும். பசுமை இல்ல வாயுக்கள் சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை-புனே இடையேயான ஹைப்பர் லூப் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. எனவே 2024ம் ஆண்டுக்குள் மும்பை-புனே இடையே ஹைப்பர் லூப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆந்திர மாநிலத்திலும் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஹைப்பர் லூப் போக்குவரத்தை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications