செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!
முழு முடக்கத்தை நோக்கி மஹாராஷ்டிரா அரசு நகர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் உதவி தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் ரிக்ஷா டிரைவர்களுக்கும் உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாம் அலை பரவல் என்றழைக்கப்படும் இது கொத்து கொத்தாக மனிதர்களை பாதித்து வருகின்றது. முன்னதாக நூறு, ஐநூறு மற்றும் ஒரு சில ஆயிரங்கள் என மட்டுமே காணப்பட்ட பரவலின் எண்ணிக்கை தற்போது ஐயாயிரம், ஆறாயிரம் மற்றும் பத்தாயிரம் என மிகக் கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடங்கியிருக்கின்றது. இதில், மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் வைரஸ் பரவல் தொற்று காணப்படுகின்றது. ஆகையால், மாநில அரசு 15 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மிக சமீபத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேர பொதுமுடக்கத்தை அரசு அறிவித்திருந்தது. இது கை கொடுக்காதநிலையில் தற்போது மீண்டும் பொதுமுடக்கத்தை நோக்கி மாநிலம் நகர்ந்துள்ளது. இந்த பொதுமுடக்க காலத்தில் மக்களுக்கும் உதவும் வகையில் கணிசமான சிறப்பு உதவி அறிவிப்புகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாநிலத்தில் உள்ள ஏழு கோடி மக்களுக்கு இலவசமாக 3கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசையை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, இயலாத மற்றும் எளிய மக்களுக்காக இரண்டு இலட்சம் உணவு பொட்டலங்களை தயார் செய்து வழங்கும்படியும் அவர் கூறியிருக்கின்றார்.

இவற்றை விட மிக முக்கியமாக ஏற்கனவே வறுமையின் விளிம்பில் இருக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என இரு மாதங்களுக்கு வழங்க அவர் கூறியிருக்கின்றார். மாநிலத்தில் பல லட்ச ஆட்டோ டிரைவர்கள் இருக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை தற்போதைய பொதுமுடக்கம் பெரிதும் பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுக்களின் விலையுயர்வு அவர்களை பெரிதும் பாதித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் பொதுமுடக்கம் ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கையை முடக்கிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த உதவித் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது ஆட்டோ டிரைவர்களின் பெரும் தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கணிசமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதே அரசின் எண்ணமாகும். கடந்த காலங்களில் வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு ரூபாய்கூட வருமானம் இன்றி பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். அதுமாதிரியான இன்னல்களை ஆட்டோ டிரைவர்கள் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயிரம் ரூபாய் உதவித் தொகை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி வயது முதிர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து, கட்டுமான பணிகள் மற்றும் சாலையோர கடைக்காரர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்பட இருப்பதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

மாநிலத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான கட்டுமான பணியாளர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து சாலையோர மற்றும் ரிக்ஷா ஆட்டோ ஓட்டுநர்களும் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநிலத்தில் வசதித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையிலேயே உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற உதவிகளுக்காக ரூ. 5,476 கோடியை உத்தவ் தாக்கரே அரசு ஒதுக்கியுள்ளது. "கடந்த முறை பூட்டுதல் அறிவித்தபோது மக்கள் என்ன மாதிரியான அவலநிலைகளைச் சந்தித்தனர் என்பதை இந்த அரசு தெளிவாக பார்த்தது. அந்தநிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காகவே உணவு பொட்டலங்கள் மற்றும் உதவித் தொகையை அரசு அறிவித்திருக்கின்றது" என மாநிலத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








