அபராத செல்லாண்களுடன் வங்கி கணக்கை இணைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் மாநில அரசு!
விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைத் தண்டிக்கும் விதமாக உச்சபட்ச அபராதம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அபராதத்தை உடனே செலுத்த முடியாத வாகன ஓட்டிகளுக்கு அபராத செல்லாண் வழங்கப்படுகின்றது. சில நேரங்களில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இதுவும் உடனடியாக வழங்க முடியாது என்பதால் இ-செல்லாண் (e-Challan) போடப்பட்டு அந்த குறிப்பிட்ட வாகன ஓட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதுமாதிரியான செல்லாண்களுக்கான அபராதம் உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. வாகன ஓட்டிகள் பலர் அபராத கட்டணத்தைச் செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர்.
அவ்வாறு இழுத்தடிப்பு செய்யும் வாகன ஓட்டிகளால் பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே, இதுபோன்று சூழலைத் தவிர்க்கும் விதமாக இ-செல்லாண்களுடன் குறிப்பிட்ட அந்த வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்கை இணைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் ஓர் மாநில அரசு கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source மஹாராஷ்டிரா மாநில அரசே இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் கோரி இருக்கின்றது. வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக அபராதத் தொகையை பெறுவதை ஆட்டோமேட்டிக்காக்கும் நோக்கிலேயே இந்த கோரிக்கையை மாநில அரசு விடுத்துள்ளது. இப்போதைய நிலவரப்படி சுமார் ரூ. 2,429 கோடி அபராதத் தொகை நிலுவை இருப்பதாக மஹாராஷ்டிரா அரசு தெரிவித்து இருக்கின்றது.
இதுபோன்று மிகப் பெரிய தொகை நிலுவையில் இருப்பதை தவிர்க்கும் நோக்கிலேயே மஹாராஷ்டிரா அரசு தனித்துவமான யுக்தியை கையில் எடுத்து இருக்கின்றது. ஜனவரி 2019 ஆம் ஆண்டிலேயே மஹாராஷ்டிரா அரசாங்கம் இ-செல்லாணை முதன் முதலாக மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இ-செல்லாண் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
சிசிடிவி (CCTV) கேமிரா காட்சிகளின் அடிப்படையிலேயே அபராதம் செல்லாண் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. தலைக்கவசம் அணியாதது தொடங்கி அனைத்து விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அம்மாநில போக்குவரத்து போலீஸார் இ-செல்லாண்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 7.53 மில்லியனுக்கும் அதிகமான வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இதுவரை 3,768 கோடி ரூபாய்க்கான அபராத செல்லாண்களையே காவலர்கள் வழங்கி இருக்கின்றனர். ஆனால், இதுவரை 1,339 கோடி ரூபாயே வசூலாகி இருக்கின்றது. இது ஒட்டுமொத்த தொகையில் 35 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள 65 சதவீத தொகையைத் திரும்பி பெறும் நோக்கிலேயே மத்திய அரசிடம் அவர்கள் வங்கி கணக்கை இ-செல்லாண் உடன் இணைப்பதற்கான கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது.
இந்த கோரிக்கைக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் எனில் நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்தே போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத கட்டணம் தானாக பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு ஓர் அரசாங்கம் செய்யும் எனில் மிகப் பெரிய பாதிப்பிற்கு வாகன ஓட்டிகள் ஆளாக நேரிடலாம். அவசர தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை அபராதம் என கூறி அரசு எடுத்துக் கொள்ளும் எனில் அது மிக மோசமான சூழலைகூட சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்படுத்த நேரிடலாம்.
இதுபோன்று ஆட்டோமேட்டிக்காக பணத்தை வசூலிப்பதற்காக மஹாராஷ்டிரா அரசு மட்டுமே கோரிக்கை விடுக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கமும் இதுமாதிரியான ஓர் கோரிக்கையையே முன் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவரை போடப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகையில் 27 சதவீதம் வரை மட்டுமே அவர்களுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகன்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுமாதிரியான சூழலைக் கருத்தில் கொண்ட மாநில அரசாங்கங்கள் சில நிலுவையில் உள்ள அபராதத் தொகையை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றன. ஆனால், இதனால் என்ன மாதிரியான ஆபத்தான சூழல் பொதுமக்களுக்கு ஏற்பட போகின்றது என்பது தெரியவில்லை. ஏற்கனவே வங்கிகள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என கூறி சேமிப்பில் இருந்து பணம் பிடித்தம் செய்து வருகின்றன.
இந்த மாதிரி சூழலிலேயே மேலும் மக்களை வஞ்சிக்கும் ஓர் முயற்சியாக ஆட்டோமேட்டிக் அபராத பிடித்தத்திற்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றன. அதேவேளையில், இதுமாதிரியான கடுமையான நடவடிக்கைகளால் போக்குவரத்து விதிமீறல்கள் குறையும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








