தானாக குப்பைகளை சேகரிக்கும் ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ் படகு: மஹாராஷ்டிரா அரசின் புதிய முயற்சி!
ஆறில் மிதக்கும் குப்பைகளைச் சேகரிக்க ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ் (தானியங்கி) படகுகளை சோதனையோட்டம் முறையில் மஹாராஷ்டிரா அரசு பயன்படுத்தி வருகிறது.

பூமி, நான்கில் ஒரு பங்கு நிலத்தாலும், மற்ற மூன்று பங்கு நீராலும் சூழப்பட்டது. பரந்து விரிந்த கடலை கரையில் இருந்து பார்த்து ரசிப்பது அலாதியான இன்பத்தை ஏற்படுத்தும். மனதில் எந்தவொரு கவலை இருந்தாலும், கடல் அலைகளை ரசிக்கும்போது மனம் குழந்தையாய் மாறும். கரை தேடி வரும் அலையில், கால் நனைக்க மனம் அழைக்கும்.
நாள் முழுவதும் கடற்கரையில் அமர்ந்து, அலைகளின் பேரழகை கண்டு ரசித்துக் கொண்டே இருக்கலாம். இத்தகைய அழகான கடலை, அதன் புனிதத்தை கெடுக்கும் வகையில் மனிதர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்பட்டு வருகின்றான். ஆம் இது தான் நிதர்சனமான உண்மை.

கடல் 90 சதவீதம் மாசடைய மனிதர்களே காரணம் என புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மனிதர்களாகிய நாம் நமது நலனுக்காக செய்யக் கூடிய செயல்கள் கடலில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் கேடாக முடிகிறது. கடலில் கொட்டப்படும் குப்பைகளில் 80 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளா தான் உள்ளது. இது இவ்வாறே நீடித்தால் 2050ம் ஆண்டிற்குள், கடலில் வாழும் உயிரினங்களைவிட கடலில் மிதக்கும் குப்பைகளின் அளவு பல மடங்காக உயரும் என கடல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகம் முழுவதிலும் இருந்து வருடத்திற்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலக்கப்படுகிறது. இதில், இந்தியாவும் விதிவிலக்கல்ல, நாமும் நமது பங்கிற்கு தினமும் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கலந்து வருகிறோம்.

சராசரியாக ஒரு சாதாரண பிளாஸ்டிக் குப்பை மட்கிப்போக 450 வருடங்களுக்கும் மேலாகுமாம். இந்த நிலையில், நாம் தினமும் அப்புறப்படுத்தும் குப்பைக் கழிவுகள் கடலில் கலந்து பெருமளவில் மாசினை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம், கடலில் மிதக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களைத் தனது இறையென நினைத்து மீன்கள் உண்ணுகின்றன. அவ்வாறு, உண்ணப்படும் பிளாஸ்டிக்குகள் ஜீரனிக்காமல் வயிற்றில் சேரந்து, மீன்களை இறக்கச் செய்கின்றன. சில நேரங்களில் கட்டியாக உருவாகி கேன்சர் போன்ற நோயினை கடல் உயிரினங்களுக்கு ஏற்படுத்துகிறது.
இந்த பிளாஸ்டிக் கழிவுகளால், சிறுசிறு மீன்கள் மட்டுமின்றி திமிங்கலம், சுறா, ஆமை உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. மனிதர்களாகிய நாம் சொகுசாக வாழ, ஒன்றும் அறியாத விலங்குகளை அழித்து வருகிறோம். இதை பலர் உணராமல், அழிவு பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

மும்பை, கொச்சின் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களில் உள்ள கடலில், கழிவு நீர் நேரடியாக கலக்கப்படுகிறது. இதனால், கடற்கரையில் ஆரம்பித்து சுமார் 8 கிமீ தூரத்துக்கு ஆல்காக்கள் எனப்படும் பாசிகள் கடலில் வளருகிறது. இந்த பாசியால், பவளப்பாறைகள் வளர்ச்சியடைய முடியாமல் சேதமடைகின்றன. இதன் தாக்கம், சிறு மீன்கள் தங்களது இனத்தைப் பெருக்க முடியாமல் போகிறது. மேலும், அதன் எண்ணிக்கையும் குறைகிறது.
இதனால், பெரிய மீன்களுக்கு சிறு மீன்கள் உள்ளிட்ட உணவுகள் பற்றாக்குறை ஏற்பட்டு இறக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. இவ்வாறு கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, கடலில் கலக்கும் கழிவு நீர்கள் நச்சுத் தன்மைக் கொண்டிருப்பதால் மீன்களின் இனப்பெருக்கத்தை அடியோடு அழித்து விடுகிறது. இவ்வாறு, நாம் தூக்கி எரியும் சிறு பிளாஸ்டிக் துண்டுகள் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுத்து வருகின்றன.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், திருவேனிசங்கமத்திற்கு அருகில் உள்ள படித்துறையில், ஆறை சுத்தம் செய்யும் பணிக்காக நவீன படகு ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆளில்லாத சிறிய ரக படகு ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'வேஷ்ட் ஷாக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படகு நவீன தொழிற்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படகை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். படகில் உள்ள கேமிராவின் மூலம் தண்ணீரில் உள்ள குப்பைகள் கண்டறியப்படுகிறது. அவ்வாறு குப்பைகள் உள்ள பகுதியில் படகை இயக்கி, அவை சேகரிக்கப்படுகின்றன.
இதைத்தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட குப்பகைளை கரைக்கு எடுத்து வரப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது. இந்த நவீன படகானது, தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலமும் இயங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, அந்த படகு தானாக இயங்கும்போது, தண்ணீரில் இருப்பது பறவையா அல்லது படகா என ஸ்கேன் செய்து குப்பைகளைச் சேகரிக்கும். மேலும், இந்த படகில் மீன்கள் சிக்காதவாறு செட்டிங் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இந்த படகினால் எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு ஏற்படாது என்கின்றனர், அதை இயக்கி வரும் மஹாராஷ்டிரா ஸ்டேட் இன்னோவேஷன் சொஷைட்டி அமைப்பினர்.
மேலும், இந்த தொழில்நுட்பத்தின்மூலம் நீர் பரப்பை சுத்தம் செய்யும் செலவீனம் குறைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற சிறுசிறு முயற்சிகள் மூலம் நீர் பரப்பை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், நீரைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் பாதுகாக்கப்படும் என நீர் வாழ் உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Source: Maharashtra State Innovation Society


Click it and Unblock the Notifications








