வரலாற்றில் மறக்க முடியாத காந்தியின் கார் பயணமும், கோட்சேயின் கார் பயணமும்...!!
எளிமையானவர், ஆடம்பரத்தை விரும்பாதவர், கொள்கை பிடிப்பில் கெட்டியானவர் என்ற புகழுக்குரியவர் மகாத்மா காந்தி. அவர் கடைபிடித்த வாழ்க்கை தத்துவார்த்தங்கள் மற்றும் கொள்கைகள் உலக மக்கள் மட்டுமின்றி முப்பது முக்கோடி தேவர்களையும் கவர்ந்த ஒன்று என்று கூறினால் மிகையாது. சுதந்திரத்திற்காக தேசம் முழுவதும் வலம் வந்த காந்திஜி, தன் வாழ்நாள் இறுதிவரை ஒரு காரை கூட சொந்தமாக வைத்திருக்கவில்லை.
ஆனால், அவர் ஒரு சில முறை மட்டும் கார்களில் பயணம் செய்துள்ளார். அப்படி அவர் பயணம் மேற்கொண்ட ஒரு சில கார்களில் ஃபோர்டு டி-சீரிஸ் கார் ஒன்றும் அவருடன் சேர்ந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. மகாத்மா காந்தியின் தந்தை கரம்சந்த், ராஜ்கோட் சமஸ்தானத்தின் திவானாக பணியாற்றினார். அந்த சமஸ்தானத்தில் இருந்த ரோல்ஸ்ராய்ஸ் காரிலும் காந்தி பயணம் செய்திருக்கிறார். ஓரிரு முறை மட்டுமே கார்களில் சென்ற பயணங்களை காந்தியால் நிச்சயம் மறந்திருக்க முடியாது.

வரலாற்றில் இடம் பிடித்த ஃபோர்டு டி சீரிஸ் கார்: 1927ம் ஆண்டு பெய்ரேலி சிறையில் இருந்து விடுதலையான காந்திஜி, ஃபோர்டு டி சீரிஸ் காரில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பயணம் அமைந்துள்ளது. காந்தி பயணம் செய்த ஃபோர்டு டி சீரிஸ் கார், இன்றளவும் பொலிவு இழக்காமல் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1920ம் ஆண்டுகளில் ஃபோர்டு டி சீரிஸ் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இருந்தது.
காரில் நின்று பிரச்சாரம் செய்த காந்தி: பெய்ரேலி சிறையிலிருந்து விடுதலையான காந்தி, ஃபோர்டு டி சீரிஸ் காரில் சுற்றுப் பயணம் செய்தபோது, காரில் நின்று கொண்டே கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றினார். காரை கூட அவர் சுதந்திர பிரச்சார கருவியாக பயன்படுத்த தவறவில்லை.
இன்றும் பயன்பாட்டில்: காந்தி சென்ற கார் இன்றும் புதுப்பொலிவுடன் இருப்பதோடு அவ்வப்போது இதனை பயன்படுத்துகிறாராம், இந்த காரை வைத்திருக்கும் ஜஸ்தன்வாலா. இதனை பொக்கிஷமாக அவர் பாதுகாத்து வருகிறார். அடுத்து காந்தியை கொல்வதற்காக கோட்சே பயன்படுத்திய கார் விபரத்தையும் தொடர்ந்து பார்ப்போம். அதுவும் இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகவே அமைந்தது.
காந்தியை கொல்ல காரில் சென்ற கோட்சே: தேசப்பிதா என போற்றப்படுபவர் காந்தி. அவரை கொன்ற கோட்சேவும் காரில் சென்றுதான் தனது வெறியை தீர்த்துக் கொண்டான். 1948ம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி 1930 மாடல் ஸ்டட்பேக்கர் காரில் சென்றுதான் காந்தியை சுட்டுக் கொன்றான்.
கோட்சே காரை இப்போ யாரு வச்சுருக்கா? காந்தியை சுட்டுக் கொள்ளும்போது கோட்சே பயன்படுத்திய காரை தற்போது டெல்லியை சேர்ந்த கார் மெக்கானிக் மற்றும் விண்டேஜ் கார் சேகரிப்பாளரான பர்வேஸ் ஜமால் சித்திக் வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்டட்பேக்கர் கார், அதிசக்திவாய்ந்த காராக புகழப்படுகிறது. இதற்காக பல விருதுகளையும் இந்த கார் வென்றுள்ளது.
மாபெரும் தலைவருக்கு மரியாதை: பிரிட்டிஷ் அடக்குமுறை காற்றில் சிக்கி மூச்சுத் திணறிய இந்தியாவை சுதந்திர காற்றை சுவாசிக்கச் செய்த மாபெரும் தலைவர் மகாத்மா காந்தி. இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த தருணத்தில், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் மகாத்மா காந்தியை நினைவு கூர்கிறது.


Click it and Unblock the Notifications