மகாத்மா காந்தி மறைந்தாலும் கார் மறையவில்லை... 100 வருஷம் பழைய கார் மாதிரியா தெரியுது? பளபளப்பா வெச்சிருக்காங்க
எத்தனை புது, புது மாடர்ன் கார்கள் வந்தாலும், பழமையான கிளாசிக் கார்கள் என்றாலே ஒருவித ஈர்ப்பு நம் அனைவருக்குமே உண்டு. 80, 90 வருடங்களுக்கு முன்பே அந்த சமயத்தில் கிடைத்த மிகவும் சில பாகங்களை கொண்டு இவ்வாறான கார்களை எவ்வாறு உருவாக்கினார்கள் என நினைக்கும்போது ஆச்சிரியமாக இருக்கும். சாதாரணமான கிளாசிக் கார்களுக்கே இப்படி என்றால், மகாத்மா காந்தி உள்ளிட்டோர் பயன்படுத்திய கார்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால்தான் அத்தகைய கார்கள் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. அவ்வாறு, காந்தியடிகள் மைசூருக்கு வந்த போது பயன்படுத்திய கார் ஒன்றை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர்களுள் முக்கியமானவர் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய வலுவான இந்திய அரசாங்கம் அமைவதற்கு அடித்தளமிட்டவர் மகாத்மா காந்தி ஆவார். இன்னும் எத்தனை நூறாண்டுகள் கழிந்தாலும் இந்தியாவின் முக்கியமான தலைவர்கள் என்று பார்த்தால், அதில் மகாத்மா காந்தியும் நிச்சயம் ஒருவராக இருப்பார்.

மகாத்மா காந்தி அவர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில் அவரது எளிமையான வாழ்வியலுக்காகவும், தொலைநோக்கு சிந்தனையுடன் அவர் எடுத்த முடிவுகளுக்காகவும் மக்கள் நிறைய பேர் காந்தியடிகளை பின்பற்றினர். அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்தெந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்த பகுதிகள் அனைத்தும் தற்போது புனித ஸ்தலங்களாக போற்றப்படுகின்றன.
உதாரணத்திற்கு, மதுரை மாநகரை சொல்லலாம். மகாத்மா காந்தி அவர்களிடம் கார் எதுவும் இருந்ததில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு செல்கிறார் என்றால், அங்குள்ள செல்வந்தர்கள் மற்றும் காந்தியடிகளை பின்பற்றுபவர்கள் தாமாக முன்வந்து தங்களது கார்களை மகாத்மா காந்தியின் போக்குவரத்துக்காக வழங்கியுள்ளனர். அவ்வாறு, அந்த சமயத்தில் காந்தி பயன்படுத்திய கார்கள் யாவும் இப்போது அருங்காட்சியகங்களில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கர்நாடகா மாநிலம் மைசூருக்கு ஒருமுறை சென்ற மகாத்மா காந்தி அவர்கள் ஸ்டூட்பேக்கர் பிரெசிடெண்ட் 8 (Studebaker President 8) என்கிற காரை பயன்படுத்தினார். மைசூருக்கு அருகே உள்ள பயானா கார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த காரை இப்போதும் உங்களால் நேரில் பார்க்க முடியும். அவ்வளவு தொலைவு செல்ல முடியாதவர்களுக்காக ஹனி முஸ்தபா என்கிற ஆட்டோமொபைல் ஆர்வலர் ஒருவர் அந்த அருங்காட்சியகத்திற்கு சென்று காந்தி பயன்படுத்திய காரை வீடியோவாக காட்சிப்படுத்தி உள்ளார்.
யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், பயானா கார் அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற பழமையான கிளாசிக் கார்களையும் காணலாம். பயானா கார் அருங்காட்சியகம் புதியதாக சமீபத்தில்தான் திறக்கப்பட்டது. பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில், பார்வையாளர்களை கவரும் விதமாக டயர் வடிவிலான கட்டிடத்தில் இந்த கார் அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள காந்தியடிகள் பயன்படுத்திய ஸ்டூட்பேக்கர் பிரெசிடெண்ட் 8 கார் ஆனது 1929ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ஆகும். ஸ்டூட்பேக்கர், ஓர் அமெரிக்கன் கார் நிறுவனம் ஆகும். அமெரிக்கன் கார்கள் என்றாலே நன்கு அகலமாக, சாலையை ஆக்கிரமித்து செல்லும் வகையில் இருக்கும். மைசூருக்கு வந்த போது மகாத்மா காந்தி பயன்படுத்திய ஸ்டூட்பேக்கர் பிரெசிடெண்ட் 8 காரும் அவ்வாறே நன்கு அகலமாக பரந்து விரிந்தது.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு கப்பல் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட இந்த காரில் 5.5 லிட்டர் இன்லைன் 8-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. 8-சிலிண்டர் என்ஜின் என்பதன் காரணமாகவே காரின் பெயரில் இறுதியில் '8' என்கிற எண் சேர்க்கப்பட்டுள்ளது. 8-சிலிண்டர் என்ஜின் என்பதால் இந்த என்ஜின் மிகவும் ஆற்றல்மிக்கதாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், கார் புதியதாக இருந்த சமயத்தில் சுமார் 100 பிஎஸ் வரையிலான ஆற்றலை அந்த காலக்கட்டத்திலேயே வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மகாத்மா காந்தியடிகள் மைசூருக்கு விஜயம் செய்தபோது நடந்த சம்பவங்கள் பலவற்றை பற்றி குறிப்புகள் உள்ளன. ஆனால், அப்போது அவர் பயன்படுத்திய காரை பற்றி தற்போது புதியதாக பார்த்ததில் மகிழ்ச்சி. இதற்கு நாம் யூடியூப்பர் ஹனி முஸ்தபாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் உருவாக்கப்பட்டு, பின் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு காந்தி பயன்படுத்திய காரணத்தினால் இப்போதும் கார் அதே கண்டிஷனில் இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









