'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு கிடைத்த புது மகுடம்; விரைவில் வெளிவரும் மஹிந்திரா ஏர்வேன்10 விமானம்
மஹிந்திராவின் விமான தயாரிப்பு நிறுவனத்தின் புதிய ஏர்வேன் 10 விமானம் பாரீஸ் கண்காட்சியில் அறிமுகமாகிறது.
மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ள ஏர்வேன் 10 டர்போப்ராப் விமானத்திற்கு ஆஸ்திரேலிய சிவில் விமான ஆணையம் பறக்கும் அனுமதியை வழங்கியுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் விமான துறைக்கான சேவைகளை வழங்கும் மஹிந்திரா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தின் சார்பில் பாரீஸ் விமான துறைக்கான கண்காட்சியில் 10 இருக்கைக்கான ஏர்வேன் 10 டர்போப்ராப் என்ற விமானத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த விமானத்திற்கு அமெரிக்காவின் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் எஃப்.ஏ.ஆர் 23 வகையில் பறக்கும் அனுமதியை சமீபத்தில் வழங்கியது.

தற்போது அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அடிப்படை மாடலாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் எஞ்சினை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா ஏர்வேன்10 டர்போப்ராப் மாடலில் ரோல்ஸ் ராய்ஸின் எம் 250 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் அதிகப்பட்சமாக 450 ஷாஃப்ட் ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 23 முதல் 25ம் தேதி வரை நடைபெறும் விமான பொருட்களுக்கான கண்காட்சியில் இந்த மஹிந்திரா ஏர்வேன்10 டர்போப்ராப் அறிமுகமாகிறது.

இந்தாண்டில் அறிமுகமானாலும், இது விற்பனைக்கு அடுத்த வருடம் வெளிவரும் என மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் முதற்கட்டமாக அறிமுகமாகும் மஹிந்திரா ஏர்வேன் 10 விமானம் இந்தியாவிலும் விற்பனைக்காக அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் பங்களிப்பாக செயல்படுத்தப்பட்டுள்ள மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஏர்வேன் 8 மாடலை தொடர்ந்து ஏர்வேன் 10 மாடலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications