மாசில்லா இந்தியாவை உருவாக்க கை கொடுக்கும் மஹிந்திரா, ஊபர்!
ஜிரோ எமிஸ்ஸன் என்ற திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக மஹேந்திரா நிறுவனம் ஊபர் கால்டாக்ஸி நிறுவனத்துடன் இணைந்து நாட்டில் மின்சார வாகன சேவையை செய்ய உள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரியால் இயங்கும் மின்வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, மின்வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும், நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் மின்வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலமாக படிப்படியாக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரித்து நாட்டில் ஜீரோ எமிஸ்ஸன் வாகன மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் ஊபர் கால் டாக்ஸி நிறுவனமும், நாட்டில் கடைசி எல்லை வரை உமிழ்வு இல்லா வாகனங்களை இயக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கடந்த 2017ம் ஆண்டு புரிந்துணர்வு கையொப்பம் இட்டுள்ளன.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய மஹிந்திரா குழுமத்தின் அதிகாரி கோயெங்கா கூறியதாவது, "ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்பட சில நகரங்கள் மின் வாகனங்களை இயக்க உகந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது. மேலும், தற்போது அங்கு பேட்டரியால் இயங்கும் நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் இத்திட்டத்தின்கீழ் சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. மேலும், தற்போது நான்குக்கும் மேற்பட்ட மாநிலங்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

அதிக விலை மற்றும் சார்ஜ் ஸ்டேஷன்கள் குறைவு ஆகிய காரணங்களால் மக்கள் மின்வாகனங்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், மஹிந்திரா வாடகை கார்கள் மீது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து பெங்களூருவை மையமாக்க கொண்டு இயங்கும் பாகிரதி டிராவல்ஸ் நிறுவனம் ஆயிரம் பேட்டரி கார்களை கொள்முதல் செய்துள்ளது. மேலும், வாடகை நிறுவனமான ஜும் கார் மற்றும் லித்தியன் டெக்னாலஜிஸ் உள்பட சில நிறுவனங்களும் கணிசமான அளவில் கார்களை ஆர்டர் செய்துள்ளன.

இதைத்தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் 5 முதல் 6 ஆயிரம் யூனிட் மின்சார கார்களைத் தயாரிக்க உள்ளது. அதற்காக, கேயூவி மற்றும் எக்ஸ்யூவி 300 ரக பேட்டரி கார்களை இன்னும் 12 முதல் 18 மாதங்களில் தயார் செய்யும். இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக மஹிந்திரா நிறுவனம் முதலீடு செய்யதுள்ளது.

முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஹிந்திரா நிறுவனம், ஓலா கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைந்து மின்வாகன கால் டாக்ஸி சேவையைத் தொடங்கியது. ஆனால், அது பெரிய அளவில் வெற்றிப்பெறாமல் முடங்கியது.

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் மீண்டும் மின்சார வாகன கால் டாக்ஸி சேவையைத் தொடங்க உள்ளது. இதற்காக ஊபர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இம்முறை மத்திய, மாநில அரசுகள் பேட்டரி வாகனங்களுக்கு அளித்துள்ள சலுகையின் இந்த சேவையை இயக்க உள்ளது.

இதைத்தொடர்ந்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஜீரோ எமிஸ்ஸன் என்னும் கொள்கையின் கீழ் பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக தற்போது வாகனங்கள் தயாராகி வருகிறது" என்றார்.

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் வாகன ஒழிப்பு திட்டத்துக்கு சிறியளவில் கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








