கோல்டு மெடல் உடன் மஹிந்திரா வாகனத்தை தட்டி சென்ற இளம் குத்துச்சண்டை வீராங்கனை!! மஹிந்திராவுக்கு பெரிய மனசுங்க!
உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக நிகாட் ஸரீனுக்கு ஓர் அட்டகாசமாக பரிசை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. அது என்ன பரிசு? உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாட் ஸரீன் எவ்வாறு வெற்றி பெற்றார்? என்பதை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பவர்களை புகழ்வதற்கு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் எப்போதும் மறந்ததே இல்லை. மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அத்தகையவர்களை சமூக வலைத்தளங்களில் பாராட்டி பதிவுகளை பதிவிடுவது வழக்கம். குறிப்பாக, விளையாட்டு துறையில் இந்தியாவிற்காக சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மஹிந்திரா சார்பில் பரிசுகள் வழங்கப்படுவது உண்டு.

2021ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது கூட, மஹிந்திரா நிறுவனம் அந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற 6 இந்திய இளம் வீரர்களுக்கு மஹிந்திரா தார் வாகனத்தை வழங்கி சிறப்பித்தது. அதன்பின், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கும் தார் வாகனங்கள் மஹிந்திரா சார்பில் வழங்கப்பட்டன.
அந்த வரிசையில், 2023 ஐபிஏ உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாட் ஸரீனுக்கு தார் எஸ்யூவி வாகனத்தை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த உலக குத்துச்சண்டை போட்டியில், லைட் ஃப்ளை வெயிட் பிரிவில், வியாட்நாமை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ந்குயென் தி தம் அவர்களுக்கும், நிகாட் ஸரீனுக்கும் இடையே இறுதிப் போட்டி நடந்தது.

இதில் எதிர் போட்டியாளரை 5-0 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து நிகாட் ஸரீன் தங்க பதக்கத்தை தனதாக்கினார். தங்க பதக்கத்துடன் சேர்ந்து 2023 ஐபிஏ உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் நிறைவு விழாவில் நிகாட் ஸரீனுக்கு மஹிந்திரா சார்பில் 'மஹிந்திராவின் வளர்ந்துவரும் பாக்ஸிங் ஐகான்' விருதும் வழங்கப்பட்டது. மேலும், நிகாட் ஸரீனுக்கு புத்தம் புதிய மஹிந்திரா தார் வாகனம் பரிசளிக்கப்படும் எனவும் அப்போதே மஹிந்திரா சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு அறிவித்தப்படி தார் வாகனத்தை நிகாட் ஸரீனுக்கு மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப் மையம் ஒன்றில் நிகாட் ஸரீன் தனது பரிசு தார் வாகனத்தை டெலிவிரி பெற்றுக் கொண்டுள்ளார். இதனை, மஹிந்திரா தாருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிகாட் ஸரீனுக்கு வழங்கப்பட்டு இருக்கும் மஹிந்திரா தார் வாகனம் நபோலி கருப்பு நிறத்தில் இருப்பதை படங்களில் காணலாம். ஆனால், மஹிந்திரா தார் வாகனத்தின் எந்த வேரியண்ட் நிகாட் ஸரீனுக்கு பரிசாக வழங்கப்பட்டு உள்ளது என்ற விபரங்கள் கிடைக்கவில்லை. மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தார் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் என இரு விதமான வெர்சன்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் எந்த வெர்சனை நிகாட் ஸரீன் பெற்றுள்ளார் என்பதும் தெரியவில்லை. மஹிந்திரா தாரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.54 லட்சத்தில் இருந்து ரூ.16.78 லட்சம் வரையில் உள்ளன. தார் வாகனத்தை 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அல்லது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் அல்லது 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம். இவற்றுடன், கியர்பாக்ஸ் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வளர்ந்துவரும் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இவ்வாறு விலையுயர்ந்த பொருள் பரிசாக வழங்கப்படுவது சந்தோஷமான விஷயமே. மஹிந்திரா நிறுவனம் இந்த காரியத்தை தொடர்ச்சியாக செய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த செயலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









