15 ஆயிரம் கோடியில் தொழிற்சாலை என்றால், எத்தனை பேருக்கு வேலை? மீண்டும் கோடிகளை கொட்டும் மஹிந்திரா!!
இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா (Mahindra), மகாராஷ்டிராவில் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த கார் மற்றும் டிராக்டர் (Tractor) உற்பத்தி மையத்தை அமைக்க ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம், மஹிந்திராவின் உற்பத்தித் திறனைப் பன்மடங்கு பெருக்கும் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் அமையவுள்ள இந்த அதிநவீன ஆலை, 2028ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் நீண்டகால உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டம் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்த ஒருங்கிணைந்த மஹிந்திரா உற்பத்தி வளாகம் முழுமையாக செயல்படத் தொடங்கியதும், ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வாகனங்களையும், 1 லட்சம் டிராக்டர்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இது இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை உற்பத்தித் தளமாக மாறும் என மஹிந்திரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏற்றுமதிச் சந்தைகள் இரண்டிற்கும் சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு அமைக்கப்படும் வாகன உற்பத்திப் பிரிவு, மஹிந்திராவின் NU_IQ கட்டமைப்பு உட்பட அடுத்த தலைமுறைக்கான தளங்களை ஆதரித்து அதில் வாகனங்களை உருவாக்கக்கூடியதாக இருக்கும். மேலும், ICE (உள் எரிப்பு இயந்திரங்கள்), மின்சாரம் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் என பல்வேறு பவர்டிரெய்ன் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய ஆலையின் உற்பத்தி பணிகள் அதிநவீன ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி அமைப்புகளுடன் திட்டமிடப்பட்டுள்ளன. இதே வளாகத்தில் வாகன ஆலைக்கு இணையாக டிராக்டர் உற்பத்தி பிரிவும் செயல்பட்டு, மஹிந்திராவின் விவசாய உபகரண உற்பத்தி பணிகளை விரிவுபடுத்த உள்ளது. அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவை மற்றும் முக்கிய வெளிநாட்டுச் சந்தைகளுக்கு இதன் மூலம் உற்பத்தி வழங்கப்படும்.
கூடுதலாக, மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் 150 ஏக்கரில் சப்ளையர் பார்க் ஒன்றும் மஹிந்திரா சார்பில் அமைக்கப்பட உள்ளது. இந்த சப்ளையர் பார்க், முக்கிய பணிகளுக்கான உதிரிபாகங்கள் வழங்குதல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Logitics) பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். மஹிந்திரா வெளியிட்டுள்ள தகவலின்படி, விதர்பா பகுதியில் அமைக்கப்படும் இந்த சப்ளையர் பார்க், சம்ருத்தி எக்ஸ்பிரஸ்வே வழியாக சாலை இணைப்பு, ரயில் இணைப்புகள் மற்றும் உள்நாட்டு, ஏற்றுமதிப் போக்குவரத்து வசதிகள் என பல நன்மைகளை கொண்டதாக இருக்கும்.

சம்பாஜிநகரில் அமையும் சப்ளையர் பார்க் புதிய நாக்பூர் தொழிற்சாலைக்கும், புனேவுக்கு அருகே சாகன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் ஏற்கனவே உள்ள ஆலைகளுக்கும் உதிரிபாகங்களை வழங்கும். இது உள்ளூர்மயமாக்கல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் திறனை மேம்படுத்தும். இது இல்லாமல், தனிப்பட்ட முறையில், மஹிந்திரா இகத்புரி-நாசிக் பிராந்தியத்திலும் நிலத்தை வாங்கவுள்ளது.
இதன் மூலம் மஹிந்திரா அதன் தற்போதைய தயாரிப்பு மற்றும் என்ஜின் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அதிநவீன தொழில்நுட்ப செயல்பாடுகளின் வளர்ச்சிக்கும் துணைபுரியும். மொத்தமாக சுமார் ரூ.15,000 கோடி முதலீடு அடுத்த 10 ஆண்டுகளில் செய்யப்படும் என்றும், மகாராஷ்டிராவில் மூன்று இடங்களில் 2,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தனது உற்பத்தி நெட்வொர்க்கை வலுப்படுத்த கையகப்படுத்தப்படும் என்றும் மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய தொழிற்சாலை மஹிந்திராவின் உற்பத்திப் பயணத்தில் ஒரு துணிச்சலான படியாகும். மஹிந்திராவின் அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் டிராக்டர்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ள இந்த ஆலை ஆனது, அளவு, நெகிழ்வுத்தன்மை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒரு ஒருங்கிணைந்த தளத்தில் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









