உல்லாச படகு தயாரிப்பில் இறங்கிய மஹிந்திரா!
வாகனங்கள் மற்றும் விமான தயாரிப்பை தொடர்ந்து படகு தயாரிப்பு துறையிலும் மஹிந்திரா குழுமம் இறங்கியிருக்கிறது. அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய படகு மாடல்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காண
வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற மஹிந்திரா குழுமம் விமான தயாரிப்பு துறையிலும் கால் பதித்தது. அடுத்ததாக, தற்போது சொகுசு படகு தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது.
அந்த நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய சொகுசு படகு மாடலை மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதுடன், அந்த படகு தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

மஹிந்திரா ஒடிஸி என்ற பெயரில் மஹிந்திராவின் படகு தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. தனிநபர் பயன்பாடு மற்றும் வர்த்தக ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஏற்ற படகு மாடல்களை மஹிந்திரா ஒடிஸி தயாரிக்கிறது.

MO22[22 அடி நீளம்], MO33[33 அடி நீளம்] மற்றும் MO35[35அடி நீளம்] என மூன்று மாடல்களில் படகு மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதவிர, ராணுவ பயன்பாட்டுக்கான படகு மாடல்களையும் தயாரித்து வழங்க இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், மஹிந்திரா MO22 மாடல் அதிவேக படகு வகையை சேர்ந்தது. கடந்த 2009ம் ஆண்டு மும்பையில் நடந்த சர்வதேச படகு திருவிழாவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த படகு மணிக்கு 77.8 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

மஹிந்திரா ஒடிஸி நிறுவனத்திடமிருந்து உல்லாச படகுகளை வாடகைக்கும் எடுத்துக் கொள்ளலாம். மஹிந்திரா கடன் திட்டத்தின் மூலமாக சொந்தமாகவும் வாங்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

பம்பார்டியர் நிறுவனத்தின் எவின்ரூட் எஞ்சின்கள் இந்த படகுகளில் பொருத்தப்பட இருக்கின்றன. வேறு வகையான எஞ்சின் ஆப்ஷன்களுடன் உண்டு என மஹிந்திரா ஒடிஸி தெரிவித்துள்ளது.

உதாரணத்திற்கு மஹிந்திரா MO35 மாடலில் 315 குதிரைசக்தி திறன்கொண்ட யமஹா எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் இந்த படகு செல்லும். Mo35 படகில் 12 விருந்தினர்கள் செல்லலாம். இந்த படகில் 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இருப்பதால் நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் பயன்பாட்டு மாடலில் மது பார் வசதி, படுக்கை வசதி, பொழுதுபோக்கு வசதிகளுடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து வழங்கப்படும் என்று மஹிந்திரா ஒடிஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த படகுகள் 100 சதவீதம் 'மேட் இன் இந்தியா' படகுகள் என மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளது. சர்வதேச தரத்துக்கு இணையான இந்த உல்லாச படகுகள் மிக குறைவான விலையில் இந்தியர்கள் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








