மஹிந்திரா கார்களின் தரத்தில் வீணா வதந்திகளை பரப்பாதீங்க... தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த மஹிந்திரா!!
நீர் வீழ்ச்சியின் வேகத்தை காரின் மேற்கூரை தாங்குமா அல்லது தாக்குப்பிடிக்காதா என்ற கேள்வி மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் ஒன்றின் சமீபத்திய வைரல் வீடியோவை பார்த்த பின்பு எழுந்திருக்கலாம். எந்த வீடியோ அது? என கேட்பவர்களுக்காக அந்த சம்பவத்தை பற்றி சிறு குறிப்பாக கூறிவிட்டு, அந்த சம்பவத்திற்கு மஹிந்திரா நிறுவனம் தனது பதிலடியை அளித்துள்ளது, அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சரியாக ஒரு வாரத்திற்கு முன், கடந்த வார இறுதி நாட்களின் போது யூடியூப்பில் வீடியோக்களை அவ்வப்போது பதிவிடக்கூடிய வீ-லாக்கர் நபர் ஒருவர் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் ஓர் மலைப்பிரதேச பகுதியில் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார். மேலும், வீ-லாக்கர் என்பதால் இந்த பயணத்தையும் ஆரம்பித்தில் இருந்தே தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி தனது யுடியூப் சேனல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவ்வாறு அவர் வெளியிட்ட வீடியோவில் ஒரு இடத்தில், அவர் தனது காரை நீர் வீழ்ச்சி ஒன்றிக்கு கீழே நிறுத்த முற்பட்ட காட்சிகளும் பதிவாகியுள்ளன. சாலையின் குறுக்கே சென்ற அந்த நீர் வீழ்ச்சியை கடந்து சென்ற இந்த நபர் பின்னர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை, மீண்டும் ரிவர்ஸில் வந்து சரியாக நீர் வீழ்ச்சிக்கு கீழே காரை நிறுத்தியுள்ளார். அதாவது மேலே இருந்து விழும் நீரானது சரியாக அவரது ஸ்கார்பியோ-என் காரின் மேற்கூரை மீதுதான் விழுந்தது.
வெளியில் மழை பெய்துபோல் இருக்கும் என அவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அங்கு நடத்ததோ வேறு. காரை அங்கு நிறுத்திய அடுத்த சில வினாடிகளிலேயே காரின் மேற்கூரையில் இருந்து நீர் கசிய ஆரம்பித்துவிட்டது. அது பின்னர் மேலும் அதிகமாக கசிய, ஒரு கட்டத்தில் காரின் மேற்கூரையில் பொருத்தப்படும் ஸ்பீக்கர்கள் மற்றும் விளக்குகள் வழியாக நீர் அதிகளவில் கொட்ட துவங்கியது. இதனை கண்டு சூதாரித்து கொண்ட அந்த நபர் உடனடியாக அங்கிருந்து காரை முன்னோக்கி நகர்த்திவிட்டார்.

இந்த சம்பவத்திற்காக அந்த நபர் காரின் தரம் குறித்து எந்தவொரு கண்டனத்தையும் முன் வைத்தது போல் தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது பல விதமான கருத்துகளை பதிவிட ஆரம்பித்துவிட்டனர். சிலர் மஹிந்திரா கார்களின் தரம் இவ்வளவுதானா என கேட்க, சிலர் காரின் மேற்கூரை மழைநீரை மட்டுமே தாங்குப் பிடிக்கக்கூடியதாக இருக்கும், ஆக்ரோஷமான காட்டு நீர் வீழ்ச்சியை தாங்குப் பிடிக்காது என கூறினர்.
அதேநேரம் வேறு சிலரோ அந்த நபர் மேற்கூரையை முறையாக மூடவில்லை எனவும், இது மஹிந்திரா நிறுவனத்தின் தரத்தை மக்கள் முன் குறைவாக காட்ட திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் எனவும் மஹிந்திரா நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் மஹிந்திரா நிறுவனத்தின் காதுகளுக்கும் சென்றுள்ளது. இதற்கு அந்த நிறுவனம் மிகவும் எளிமையாக தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக மஹிந்திரா ஸ்கார்பியோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். மேற்கூறிய சம்பவம் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில், வேறொரு ஸ்கார்பியோ-என் காரை வேறொரு நீர் வீழ்ச்சிக்கு கீழ் நிறுத்தி மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சோதனை செய்து காட்டியுள்ளது. இந்த சோதனையில் காருக்குள் ஒரு துளி நீர் கூட கீழே விழாததை வீடியோவில் காண முடிகிறது.
மேலும், இது நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் செய்யப்பட்டது, நீங்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் இந்த வீடியோவில் மஹிந்திரா கேட்டு கொண்டுள்ளது. இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்த நபர் மேற்கூரையை மூடியவாறே காரை நீர் வீழ்ச்சிக்கு கீழ் நிறுத்தினார். ஆனால் மஹிந்திரா நிறுவனம் இந்த சோதனையில் நீர் வீழ்ச்சி எவ்வளவு வலுவானதாக உள்ளது என்பதை காட்ட சன்ரூஃப் மூடப்படாமல் உள்ளதை வீடியோவில் பார்க்க முடியும்.
அதுமட்டுமின்றி, அந்த நபர் சென்ற நீர் வீழ்ச்சியை காட்டிலும் இது கூடுதல் வலுவானதாக உள்ளதை சொல்லியே ஆக வேண்டும். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அந்த சம்பவம் வேண்டுமென்றே மஹிந்திரா பிராண்டின் தரத்தையும், நம்பகத்தன்மையை குறைப்பதற்காக நடத்தப்பட்ட செயல் போன்றே நம்மை சந்தேகிக்க வைக்கிறது. இவ்வாறான சூழ்ச்சி நடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொண்டதன் காரணமாகவே மஹிந்திரா நிறுவனம் இந்த விஷயத்தில் நேரடியாக களமிறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








