எமனாய் வந்த லாரி... வாங்கினால் இப்படியொரு மஹிந்திரா காரை வாங்க வேண்டும்!! என்ன நடந்தது தெரியுமா?
சாலை விபத்துகளுக்கு நம் இந்தியா பெயர் போனது. நம் நாட்டில் தினந்தோறும் சர்வ சாதாரணமாக நூற்றுக்கணக்கான விபத்துகள் அரங்கேறுகின்றன. இதன் காரணமாக, நன்கு வலிமையான மற்றும் பாதுகாப்பான கார்களை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை நம் நாட்டில் ஏற்படுகிறது. இதனை புரிந்துக் கொண்டு, தரமான கார்களை உற்பத்தி செய்யும் கார் நிறுவனங்களாக மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் விளங்குகின்றன. இந்த இரு நிறுவனங்களின் கார்கள் பல்வேறு விபத்துகளில் இருந்து பயணிகளை காப்பாற்றிய சம்பவங்களை இதற்குமுன் பலமுறை பார்த்துள்ளோம்.
அந்த வரிசையில், இங்கு ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் இரு லாரிகளுக்கு இடையே சிக்கி அப்பளம் போல் நசுங்கியுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், விபத்திற்கு உள்ளான ஸ்கார்பியோ-என் காரின் பரிதாப நிலைமையை காணலாம். காரின் முன் மற்றும் பின்பக்கங்கள் முற்றிலும் நசுங்கி, பாதி கார் மட்டுமே காட்சியளிக்கிறது.

அப்படியென்றால், இந்த விபத்து எவ்வளவு கோரமாக மற்றும் வேகமாக நடைபெற்றிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். ஆனால் இந்த விபத்தில், காருக்குள் இருந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. மஹாராஷ்டிரா மாநிலம், பிம்ப்ரி சின்ச்வாட் என்கிற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
முன்னால் செல்லும் வாகனங்களை நெருக்கமாக பின்தொடர கூடாது என்பதற்கு இந்த விபத்து உதாரணம் ஆகும். அதுவும், முன்னால் லாரி செல்கிறது என்றால் 10 அடிக்கும் மேல் இடைவெளியில் செல்வது நல்லது. ஆனால், அதனை உணராத இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் டிரைவர், டிரைலர் எனப்படும் சரக்கு பெட்டி இல்லாத கனரக லாரியை நெருக்கமாக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த அந்த லாரி டிரைவர் பிரேக் கொடுத்துள்ளார். இதனை கண்டதும் ஸ்கார்பியோ-என் கார் டிரைவரும் பிரேக் கொடுத்துள்ளார். ஆனால், ஸ்கார்பியோ-என் காருக்கு பின்னால் வந்த மற்றொரு லாரியின் டிரைவர் பிரேக் கொடுப்பதற்கு சில வினாடிகள் தாமதமாகி உள்ளது. ஹைவேயில் அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும்போது விபத்து நடப்பதற்கு இந்த சில வினாடிகளே போதுமானது ஆகும்.
பின்னால் வந்த லாரி மோதியதில் இந்த ஸ்கார்பியோ-என் கார் முன்னால் பிரேக் பிடித்து நின்ற லாரியின் பின்பக்கத்துடன் சேர்த்து அழுத்தப்பட்டுள்ளது. இரு லாரி டிரைவர்களும் பிரேக் கொடுத்தனர் என்றாலும், அதற்குள்ளாக இரு லாரிகளுக்கு இடையே சிக்கி அப்பளம் போல் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நசுங்கியது. என்ஜின் உள்பட காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனை காட்டிலும் அதிகமாக, காரின் பின்பகுதி பலத்த சேதாரத்தை சந்தித்துள்ளது.

ஆகையால், இந்த ஸ்கார்பியோ-என் காரை பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்துவது என்பது முடியாத காரியம் ஆகும். ஆனால், முன் இருக்கை பகுதி பெரியதாக எந்தவொரு சேதமும் இல்லாமல் இருக்கிறது. ஆதலால், சம்பவத்தின்போது காருக்குள் முன் இருக்கை பகுதியில் மட்டுமே பயணிகள் இருந்திருக்க வேண்டும். இந்த விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என செய்திகள் தெரிவிப்பதால், பின் இருக்கைகளில் பயணிகள் யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு கார்கள் இரு வாகனங்களுக்கு இடையே சாண்ட்விச் போல் நசுங்குவது இந்திய சாலைகளில் ஒன்றும் புதியது அல்ல. கடந்த 2023ஆம் ஆண்டில் கூட மேற்கு வங்காளத்தில் ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று இதேபோன்று இரு லாரிகளுக்கு இடையே நசுங்கியது. அந்த சமயத்தில் அந்த வெர்னா காருக்குள் இருவர் இருந்தனர், அவர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு இரு லாரிகளுக்கு இடையே கார் நசுங்கும் போது, காருக்குள் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். தற்போது மஹாராஷ்டிராவில் நடந்துள்ள சம்பவத்தில் நல்லவேளையாக மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் பின் இருக்கைகளில் யாரும் அமர்ந்திருக்கவில்லை. இதனால்தான், எந்தவொரு உயிரிழப்பும் இந்த விபத்தில் ஏற்படவில்லை.


Click it and Unblock the Notifications









