20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்! சின்ன கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பிய பயணிகள்!
ஜம்முவில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இந்த காருக்குள் இருந்த இரண்டு பயணிகள் சிறு கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர். இந்த அதிசயம் நடந்தது எப்படி? தலை குப்புற கவர்ந்த காரில் இவர்கள் எப்படி உயிர் தப்பினார்கள் என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.
ஜம்மு பகுதி பெரும்பாலும் மழை பிரதேசமாக இருப்பதால் இங்கு சில இடங்களில் ரோடு உயரமாகவும் வீடு பள்ளத்திலும் இருக்கும் வகையில் வீடுகள் கட்டப்பட்டிருக்கும். பொதுவாக மலை பிரதேசங்களில் இப்படியான வீடுகளை நாம் காண முடியும். இப்படியான ஒரு பகுதியில் சமீபத்தில் ஒரு பெரிய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்த பகுதி பள்ளத்தில் வீடு இருப்பதாகவும், மேட்டில் ரோடு இருப்பதாகவும் உள்ள இடம் என்பது உறுதியாக தெரிகிறது.

இங்கு ரோட்டில் சென்று கொண்டிருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தடுமாறி அந்த வீடு இருந்த பள்ளத்திற்குள் தலைகுற்ற விழுந்துள்ளது. இந்த காருக்குள் 2 பயணிகள் இருந்துள்ளனர் இந்த மோசமான விபத்திலும் இந்த இரண்டு பயணிகளும் சிறு கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர். மஹிந்திரா காருக்கு சேதம் ஏற்பட்டாலும் உள்ளே இருந்த பயணிகளின் உயிரை அந்த கார் காப்பாற்றியுள்ளது.
இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதை நாம் பார்க்கும் போது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தலைகுப்புற ஒரு பள்ளத்தில் கிடக்கிறது. இந்த காரின் ரூப்-டாப் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. ஆனால் இந்த காரின் ஒட்டுமொத்த எடையையும் காரின் உள்ள ஏ பில்லர் தாங்கியுள்ளது. இதனால் காருக்குள் இருந்த பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் காருக்குள் இருந்த பயணிகள் எந்தவித காயங்களும் இல்லாமல் உயிர்தப்பி பத்திரமாக காரில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த காரை பார்க்கும்போது இந்த கார் சாலையிலேயே இரண்டு மூன்று முறை உருண்டு தலைக்குப்புற இந்த பள்ளத்தில் வந்து கவிழ்ந்து இருக்கலாம் என்றே தெரிகிறது. விபத்து எப்படி நிகழ்ந்தது என தேடிப் பார்க்கும்போது இதற்கான ஆதாரப்பூர்வ விஷயங்கள் எதுவும் இல்லை. சிசிடிவி கேமரா, டேஷ் கேமரா போன்ற எந்த வீடியோ ஆதாரங்களும் இல்லை.
ஆனாலும் விபத்து நடந்த சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் இருக்கிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் கார் என்பதால் இந்த கார் லேசான மணல் இருக்கும் பகுதியில் தனது கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பு இருக்கிறது . இப்படியாகத்தான் இந்த கார் மணல் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது தனது கட்டுப்பாட்டை இழந்திருக்கும் என தெரிகிறது.
கட்டுப்பாட்டை இழந்து இந்த கார் விபத்தில் சிக்கி இருந்தாலும் இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இந்த காருக்கு உள்ளே இருக்கும் பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் 5ஸ்டார் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 29.25 மதிப்பெண்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 48க்கு 28.94 மதிப்பெண்களையும் இந்த கார் பெற்றுள்ளது. இந்த கார் பக்கவாட்டு பகுதியில் மோதல்களை சந்தித்தாலும் சிறப்பாக பாதுகாக்கும் என சான்று வழங்கப்பட்டுள்ளது.
குளோபல் என்கேப் சோதனையில் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் உள்ளே உள்ள பயணிகள் மற்றும் டிரைவருக்கு கழுத்துப் பகுதியில் நல்ல பாதுகாப்பை வழங்குவதாகவும், நெஞ்சு பகுதியில் ஓரளவு பாதுகாப்பை வழங்குவதாகவும் சான்று அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பான காராக இருந்ததால் இந்த விபத்தில் காருக்குள் இருந்த இரண்டு பயணிகளும் காயம் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அதனால் இந்திய மக்கள் மத்தியில் தற்போது பாதுகாப்பான கார்கள் மீதான மோகம் அதிகமாகியுள்ளது. மக்கள் கார் வாங்கும் முடிவை அதன் பாதுகாப்பு அம்சங்களை வைத்தே முடிவு செய்கின்றனர். அந்த வகையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் நல்ல பாதுகாப்பு அம்சம் நிறைந்த காராக இருக்கிறது என்பதற்கு இது நல்ல சான்றாக உள்ளது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் வாகனம் ஓட்டும்போது எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக மலைப்பகுதியில் வாகனம் ஓட்டும்போது அதிக வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது. எப்பொழுதும் மிதமான வேகத்திலேயே வாகனத்தை ஓட்ட வேண்டும். எதிர்பாராத நேரங்களில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மலைப்பாதையில் பெரிய விபத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








