எல்லாரும் ரொம்ப நம்பனாங்க! ஓடி கொண்டிருந்தபோது டயர் கழன்று பயங்கர விபத்து! 5 ஸ்டார்லாம் சும்மா விளம்பரத்துக்கா
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு நடத்திய மோதல் சோதனையில், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை விரும்பி வாங்கி கொண்டிருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

மிகவும் பாதுகாப்பு நிறைந்த கார் என்றாலும் கூட, மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் மீது தற்போது எழுந்துள்ள ஒரு குற்றச்சாட்டு வாடிக்கையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. இதற்கான காரணம்தான், வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆம், சாலையில் ஓடி கொண்டிருந்தபோதே மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் முன் பக்க வீல் தனியாக கழன்று வந்து விட்டதாம். முன் பகுதியில் இடது பக்கத்தில் உள்ள வீல் திடீரென கழன்று சென்றதாக, மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் உரிமையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்து காரணமாக 2 கார்களும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின், முன் பக்க க்ரில் மற்றும் பம்பர் ஆகியவை சேதமடைந்துள்ளன.
எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. நாகலாந்து மாநிலம் திம்மாபூர் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஆனாலும் சாலையில் ஓடி கொண்டிருந்தபோது வீல் திடீரென கழன்று வந்ததால் நடைபெற்றுள்ள இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கி 5 மாதங்கள் மட்டுமே ஆவதாக, அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உற்பத்தி குறைபாடு (Manufacturing Defect) காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த காருக்கு பதிலாக வேறு ஒரு காரை புதியதாக வழங்க வேண்டும் அல்லது காருக்காக செலுத்திய பணத்தை மொத்தமாக திருப்பி தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் உரிமையாளர், இது உற்பத்தி குறைபாடு என குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் மஹிந்திரா நிறுவனம் இன்னும் அந்த காரை பரிசோதிக்கவில்லை என கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் இருந்து உடனடியாக அறிக்கை வெளியிடப்படும்.
அதில், சம்பவத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் மஹிந்திரா நிறுவனம் தற்போது வரை அறிக்கை எதையும் வெளியிடவில்லை. எனவே கூடிய விரைவில் காரை பரிசோதித்து, மஹிந்திரா நிறுவனம் அறிக்கை வெளியிடும் என நாம் எதிர்பார்க்கலாம். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் மீது உற்பத்தி குறைபாடு தொடர்பான புகார்கள் எழுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களிலும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் உரிமையாளர்கள் பலர், உற்பத்தி குறைபாடு தொடர்பாக சமூக வலை தளங்களில் புகார் எழுப்பியுள்ளனர் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இன்னும் காரை பரிசோதிக்கவில்லை என்பதால், உண்மையிலேயே இந்த சம்பவம் உற்பத்தி குறைபாடு காரணமாகதான் நடைபெற்றதா? என்பதை உறுதியாக கூற முடியவில்லை. ஒருவேளை டயர் பஞ்சர் சரி செய்தபோது, போல்ட்களை சரியாக பொருத்தாத காரணத்தால் கூட இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம். எனவே மஹிந்திரா நிறுவனத்தின் அறிக்கை வரும் வரை எதையும் உறுதியாக கூற முடியாது.


Click it and Unblock the Notifications








