கோடி கோடியாய் பணமிருந்தும் அமைதியை தேடி ஓர் நீண்ட தூர பயணம்!! புனே தொழிலதிபரின் மஹிந்திரா தார் வாழ்க்கை...
மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தில் புனேவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனியாக 63,000 கிமீ தொலைவிற்கு பயணம் செய்து பிரமிக்க வைத்துள்ளார். எதற்காக இந்த நீண்ட தூர பயணம்? இவ்வளவு தொலைவை நிறைவு செய்வதற்கு இவருக்கு மொத்தம் எவ்வளவு காலம் ஆனது? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி பாரக்கலாம்.
எந்தவொரு மனிதனுக்கும் உடல் எந்த அளவிற்கு வலிமையானதாக உள்ளதோ அதே அளவிற்கும் மனதும் வலிமையானதாக இருத்தல் அவசியம். ஆதலால் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், மனதையும் அவ்வப்போது அமைதியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு பாடல்களை கேட்கலாம், புத்தகங்களை படிக்கலாம் போன்ற சில எளிய வழிகள் உள்ளன.

அதேபோல், மக்கள் & போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற வாழ்க்கையில் இருந்து தப்பித்து சில நாட்களுக்கு இயற்கையை நோக்கி ஓடலாம். நம் இந்தியாவில் சுற்றுலா தளங்களுக்கு பஞ்சமே இல்லை. மத்திய அரசும் இதைத்தான் கூறுகிறது. இதற்காகவே 'தேகோ அப்னா டேஷ்' என்கிற பெயரிலான ஓர் பிரச்சாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தேகோ அப்னா டேஷ் என்பதன் தமிழாக்கம் 'உங்கள் நாட்டை பாருங்கள்' என்பதாகும்.
அதாவது, உங்களது நாட்டில் ஏகப்பட்ட சுற்றுலா தளங்களும், கலாச்சார மற்றும் பாரம்பரியம் மிக்க இடங்கள் பல உள்ளன அவற்றை பாருங்கள் என்பதை இதன் மூலமாக மத்திய அரசு நம்மிடத்தில் கூற முயல்கிறது. இதனை நன்கு புரிந்துக்கொண்ட புனேவை சேர்ந்த தொழிலதிபர் டெஹ்சூன் கர்மலவாலா என்பவர் தனது மஹிந்திரா தார் வாகனத்தில் ஓர் நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நீண்ட தூர பயணம் என கூறுவதை காட்டிலும், நீண்ட நீண்ட தூர பயணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த 1.5 வருடத்தில் சுமார் 63,000 கிமீ தொலைவிற்கு தார் வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பயணத்தை இவர் தனியாக மேற்கொண்டுள்ளார்.
2021 அக்டோபர் மாதத்தில் துவங்கிய இந்த பயணத்தில் இந்தியாவில் உள்ள 104 தேசிய பூங்காக்கள், 54 புலி சரணாலயங்கள், 32 யானை சரணாலயங்கள் மற்றும் 40க்கும் அதிகமான உலக பாரம்பரிய மிக்க இடங்களுக்கு டெஹ்சூன் சென்றுள்ளார். தனது இந்த நீண்ட தூர பயணத்தை ஆவண படமாக்கி உள்ள டெஹ்சூன் இந்தியாவின் பரந்த & அடர்ந்த காட்டு பகுதிகளில் கண்ட அற்புதமான காட்சிகளை தனது கேமராவில் காட்சிப்படுத்தி உள்ளார்.

ராஜஸ்தானின் வறண்ட பாலைவனத்தில் இருந்து வடகிழக்கு இந்தியாவின் மழைப் பிரதேசங்கள் வரையில் காட்சிப்படுத்தியுள்ளார். அதாவது, அத்தனை இடங்களுக்கு தனது தார் வாகனத்தில் டெஹ்சூன் சென்றுள்ளார். இவ்வளவு ஏன் வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவுக்கு கூட இவர் சென்றுள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இயற்கை வளங்களை காண மக்கள் பலர் தெற்காசிய நாடுகளுக்கு செல்வதாகவும், இந்தியாவிலேயே அத்தகைய பகுதிகள் ஏராளமானவை உள்ளதாகவும் டெஹ்சூன் தெரிவிக்கிறார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வளவு தொலைவு பயணத்திற்கு மஹிந்திரா தார் வாகனத்தை டெஹ்சூன் தேர்வு செய்திருப்பது உண்மையில் அருமையான முடிவாகும். ஏனெனில் எந்தவொரு சாலைக்கும் எடுத்து செல்வதற்கு ஏற்ற வாகனமாக தார் விளங்குகிறது. ஆனால் இவ்வாறான நீண்ட தூர, நீண்ட கால பயணங்களை டெஹ்சூன் போன்ற தொழிலதிபர்களால் மட்டுமே மேற்கொள்ள முடிகிறது என்பது கசப்பான உண்மை ஆகும்.


Click it and Unblock the Notifications









